Wednesday, April 2, 2014

பழந்தமிழ்க் கணிதத்தில் ஆண்டின் தொடக்கம்


தமிழ்ப்புத்தாண்டு தைத் திங்களில் தொடங்கிறதா? சித்திரைத் திங்களில் தொடங்குகிறதா? என்பது பெரிய வாதமாக இருக்கிறது. பலரும் பல சான்றுகளைக் காட்டுவர்.  தைத்திங்களே! என்று ஒரு சாராரும் சித்திரைத் திங்களே! என்று ஒரு சாராரும் கூறிக்கொண்டிருக்கின்றனர்.

            தமிழ் மருத்துவர்கள் காலத்தையும் பருவத்தையும் முறையாக அறிந்தவர்கள். காலத்திற்கு ஏற்றவாறு உடம்பில் மாற்றங்கள் நிகழ்கின்றன. காலத்திற்கும் இயற்கைக்கும் ஏற்ப மருத்துவம் காண்பதே தமிழ் மருத்துவம் என்பதால் காலம் மருத்துவத்தின் தேவை எனக்கருதி காலக்கணிதத்தைக் குறிப்பிட்டுள்ளனர்.

            ஆண்டு ஒன்று பன்னிரண்டு மாதங்கள்!, இரண்டு மாதங்கள் கொண்டது பருவம் ஒன்று!, ஆறு பருவங்கள் கொண்டது ஆண்டு ஒன்று! எனக்கருதினர்.

முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்,கார், கூதிர் எனும் ஆறும் பருவங்களாம். மார்கழி, தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை எனும் பன்னிரண்டு மாதங்களாம்.

                        ”ஈராறு திங்களையும் இவ்விரண்டாய் வில்முதலாய்
                        ஓராறு இருதுவாய் ஓதுவரே – சீரார்
                        இரும்பொழுதின் பேர்தான் இருபனி வேனில்
                        கருமுகிற் காலமெனக் காண்”
            பெரும்பொழுது பனியில்தான் தொடங்குகிறது. பனி என்பது ’வில் முதலாய்’ என்பதால் மார்கழியில் தொடங்குகிறது.

            ஆண்டின் தொடக்கம் மார்கழியில் தொடங்குவதாகக் கொண்டாலும் சூரியனின் வடதிசைச் செலவு தைத்திங்கள் முதல் நாளில் தொடங்குவதால், தைத்திங்கள் முதல் நாள் எனக் கொண்டுள்ளனர்.
           
அயனங்கள் தோன்றும் முறை

            பூமி தன்னைத் தானே சுற்றிக்கொண்டு ஆண்டுக்கு ஒருமுறை சூரியனைச் சுற்றி வரும். அவ்வாறு சுற்றும் பூமியானது தன் அச்சில் செங்குத்தாகச் சுற்றாமல் சற்றுச் சாய்ந்து சுற்றுவதால் தான் சூரியன் வடக்கிலும் தெற்கிலும் செல்வது போலக் காணப்படும். இதனைக் கணித நூலார் வரக்குச் செலவு தெற்குச் செலவு என்பர். அவை ஒவ்வோர் ஆண்டிலும் தை, ஆடி மதங்களில் முதல் நாளன்று தொடங்கும்.

                                                ”சுற்றும் பூமி சூரியனைச்
                                                            சுற்றா மற்செங் குத்தாகச்
                                                சற்றுச் சாய்ந்து சுற்றுவதால்
                                                            தானே பானு வடக்கிரிந்தும்
                                                தெற்கிற் சார்ந்துந் தோற்றுமதைச்
                                                            செப்பும் ஆண்டின் இருசெலவாய்
                                                மற்றச் சோதி நூற்கணிதர்
                                                            மகரங் கடகம் அதன்முதலே.”

என்று தெளிவாகத் தெரிவித்திருப்பதால் ஆண்டின் தொடக்கம் தை மாதம் ஆடி மாதம் முதல் நாள் என்பது தெளிவு. ஆடியில் ஆண்டு தொடக்கமாகக் கொள்ளார்! ஏனெனில் ஆடி வித்தைக்கும் காலம். தை அறுவடையெனும் புது வரவுக்காலம். புது வரவை வரவேற்கும் காலமே புத்தாண்டின் தொடக்கம் என்பர்.

                                                            வெளியீடு

                                    ”வைத்தியத் திருப்புகழும் தனிப்பாடல்களும்”                                         
அருள்மிகு பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்
            சித்த மருத்துவநூல் வெளியீட்டுக் குழு
இந்திய மருத்துவத்துறை இயக்குநர் அலுவலகம்
                        சென்னை – 600029

                        முதற்பதிப்பு: 1917

                        இரண்டாம் பதிப்பு: 1975

Tuesday, January 15, 2008

பொங்கலோ பொங்கல்!

(இது பூங்கா வலையிதழுக்காக, அவர்கள் கேட்டுக் கொண்டதின் பேரில், சென்ற ஆண்டு எழுதிய கட்டுரை. என்னுடைய வலைப்பதிவிலும் இருக்கிறது. இங்கும் சிலர் படிக்கக் கூடும் என்று கருதி மீண்டும் பதிகிறேன்.)

பொங்கலைப் பற்றிக் கேட்டால், சட்டென்று பலரும் "தமிழர் திருநாள், உழவர் திருவிழா, நன்றி சொல்லும் நேரம்" என்று சொல்லப் புகுவார்கள். அப்படிச் சொல்வது ஒருவகையில் சரிதான்; ஆனால் அது முழுமையில்லாத, ஒருபக்கமான, பக்கமடைச் (approximate) செய்தியாய் அமைந்து விடும். முழுமையாய்ச் சொல்ல வேண்டுமால், சரியானபடி அறிய இன்னும் கொஞ்சம் ஆழப் போக வேண்டும். குறிப்பாக "தை முதல் நாளில் இந்த விழாவை ஏன் வைத்தார்கள்?" என்ற கேள்விக்கு விடை காண வேண்டும். மேலும் இந்த விடைகாணலின் முதற்படியாக, சூரியனைப் புவி சுற்றும் சாய்ந்த நீள்வட்டத்தைப் (inclined ellipse; இதைப் புவியின் பரிப்பு மண்டிலம் என்றும் சொல்லுவது உண்டு. பரிதல் = செல்லுதல்) புரிந்து கொள்ள வேண்டும். அதைப் புரிந்து கொண்டால் தான், நம்முடைய பருவங்களின் காரண கருமங்கள், பண்டிகைகளின் உட்கருத்து, போன்றவை புலப்படும். பொங்கல் விழா தொடங்கிய காலம், அதன் வெளிப்பாடு, அந்த விழா முன்னால் எதைக் குறித்திருக்கும் என்ற காலமாற்றத்தில் ஏற்பட்ட வேறுபாடுகளை இங்கு சொல்ல முற்படுகிறேன்.

சூரிய நாள்காட்டைப் (நாள்காட்டு> நாள்காட்டம்> நாக்ஷத்திரம்> நக்ஷத்ரம் = star) புவியோடு சேர்ந்து பல கோள்கள் வலந்து (வலத்தல் = to revolve) கொண்டிருக்கின்றன. இந்த வலந்தைகளின் (planets) வலம், கிட்டத்தட்ட ஒரே தளத்தில் தான் நடக்கிறது. இந்தச் சுற்று வலயத்தை ஏகலோடி என்று வானியலிற் சொல்லுவர். (ecliptic; வலந்தைகள் ஏகி ஓடும் தளம் ஏகலோடி; ஏகுதல் = செல்லுதல்; ஏகலோடியை ஞாயிற்று மண்டிலம் என்றும் சொல்லுவது உண்டு.) இந்த ஏகலோடியில் வலக்கும் மற்ற கோள்களோடு நம்முடைய புவியைத் தொடர்பு படுத்தும் முகமாக, இன்னொரு வட்டத்தையும் வானியலில் கற்பித்துச் சொல்லுவார்கள். அது வேறு ஒன்றும் இல்லை; ஞால நடுவரையையே (terrestrial equator;), தொலைவில் தெரியும் வானவரம்பு (horizon) அளவுக்குப் பெரிது படுத்தி, அதை வான் நடுவரையாய் (celestial equator) உருவலித்துக் காட்டுவர். இந்த வான் நடுவரையை இன்னொரு விதமாய் விசும்பு வலயம், விசும்பு வட்டம் என்று கூடச் சொல்லுவதுண்டு.

விசும்பு வட்டம் என்பது புவியின் தன்னுருட்டோடு (self-rotation) தொடர்புடையது; ஏகலோடி என்பது எல்லாக் கோள்களுமாய்ச் சுற்றும் ஒரு வலயத் தளம். இந்த இரு வட்டங்களும் ஒன்றையொன்று ஒருக்களிப்பாய் (obliquity) வெட்டிக் கொள்கின்றன. (சிவகங்கை வட்டாரத்தில் ஒருக்களித்தல் / ஒருக்கணித்தல் என்ற வினைச்சொல் சாய்ந்து இருத்தல் என்ற பொருளைக் கொள்ளும். ஒருக்களித்துப் படுத்தான் என்றால், மல்லாக்கப் படுக்காமல் கொஞ்சம் திரும்பிக் கிடைமட்டத்திற்குச் - horizontal - சாய்ந்தாற்போல் ஒருபக்கமாய் உடம்பை வைத்துப் படுப்பது) இத்தகைய ஒருக்களிப்பின் காரணமாய், கோடையும் (summer), வாடையும் (winter), இடையே பசந்தமும் (பச்சையாய்ப் பசிய இருப்பது பசந்தம்; spring; இதை ஒலிப்பு மாற்றி ப/வ போலியில் வசந்தம் என்று இன்று சொல்லுகிறோம்.), கூதிரும் (இலைகள் கூம்பி உதிர்வது கூதிர்; autumn; கூதிருக்கு அப்புறம் நீளும் முன்பனிக் காலத்தில் அடிக்கும் காற்று கூதல்) எனப் பருவங்கள் மாறி மாறி வருகின்றன. அதன் விளைவால் கோடையில் வெக்கையும், வாடையில் குளிரும் நம்மை வாட்டுகின்றன. குளிருக்கு அவ்வளவு பழகாத (ஆனால் வெக்கையை எப்படியும் பொறுத்து விடலாம் என்று பழகிய) தமிழர், "குளிர்காலம் குறையாதா?" என்று எதிர்பார்ப்பது இயற்கையே. பருவச் சுழற்சியின் காரணத்தால், குளிர் அதிகமாய் இருக்கும் நாளே, "குளிர் இனிக் குறையப் போகிறது" என்று உணர்த்துகின்ற நாளாகும். அந்த நாள் வரும் போது, "இனிமேல் வருவது மகிழ்வான காலம், வாட்டுகின்ற குளிர் தொலைந்து போகும்" என்று தமிழர் களி கொண்டு விழா எடுப்பது இயற்கையே.

இப்படி ஒரு நீண்ட பின்புலத்தை எடுத்துச் சொல்லுவது பொங்கல் விழாவின் அடிப்படையைச் சொல்லுதற்குத் தான்.

ஆண்டின் ஒவ்வொரு பருவ காலத்திலும், பகலும் இரவும், ஒரே அளவுப் பொழுதாக 12 மணி நேரம் இருப்பதில்லை. கோடையில் பகல் நீளுகிறது; வாடையில் இரவு நீளுகிறது. ஆனாலும் ஆண்டின் இரண்டே இரண்டு நாட்களில் மட்டும், பகலும் இரவும் ஒத்த (=ஒரே அளவுள்ள) நாட்களாக அமைகின்றன. அந்த நாட்களை ஒக்க நாட்கள் (equinoxes) என்றே மேலையர் அழைக்கின்றனர். மற்ற நாட்களில் பகலோ, இரவோ, ஒன்று மற்றொன்றைக் காட்டிலும் அதிக நேரம் வியலுகிறது. (அதாவது பகல் குறைந்து இரவு நீண்டோ, அல்லது பகல் நீண்டு, இரவு குறைந்தோ, இருக்கின்றன). இப்படிப் பகலும் இரவும் ஒன்றே போல ஒக்க இருக்கும் மார்ச்சு 22 - ஆம் நாளைப் பசந்த ஒக்க நாள் (spring equinox) என்றும், செப்டம்பர் 23 - ஆம் நாளைக் கூதிர் ஒக்க நாள் (autumn equinox) என்றும் சொல்லுவார்கள்.

இது போக, நீள்வட்டத்தில் செல்லும் புவியில் இருந்து சூரியனின் தொலைவை அளந்தால், மேலே கூறிய இரண்டு ஒக்க நாட்களில் மட்டும் நடுவார்ந்த தூரம் (median distance) இருக்கும். மற்ற நாட்களில் எல்லாம், புவிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் கூடியோ, குறைந்தோ, வரும். இப்படிக் கூடுதல், குறைச்சல் வரும் போது, வலயத்தின் ஓரிடத்தில் மட்டும், இருப்பதிலேயே அதிக தூரமாகவும், வலயத்தின் இன்னொரு இடத்தில், இருப்பதிலேயே குறைந்த தூரமாகவும் அமையும். இருப்பதிலேயே கூடிய தூரமாய் புவியும் சூரியனும் அமையும் நாளைப் பனி முடங்கல் என்றும் (winter solistice; முடங்கல் = அமைதல்; முடங்கிப் போதல்; மாட்டிக் கொள்ளுதல்; பனிக் காலத்தில் அமைதல் - திசம்பர் 22-ம் நாள்), அண்மைத் தூரத்தில் புவியும் சூரியனும் அமையும் நாளை வேனில் முடங்கல் என்றும் (summer solistice; வேனில் = வெய்யிற் காலம் - சூன் 22 ஆம் நாள்) நாம் சொல்லுகிறோம்.
புவிக்கு தன்னுருட்டம் (self-rotation), வலயம் (revolution) என்ற இரு இயக்கங்கள் போக, கிறுவாட்டம் (gyration; பம்பரம் போன்ற ஆட்டம்) என்னும் இன்னோர் இயக்கமும் இருக்கிறது. அதைப் புவியில் இருந்து புரிந்து கொள்வதற்கு மாறாக இந்த ஒக்க நாட்களின் இயக்கமாய்ப் புரிந்து கொள்ளுவது இன்னும் எளிதாக இருக்கும். அதாவது, ஒவ்வோர் ஆண்டும் இந்த ஒக்க நாட்கள் என்பவை சிறிது சிறிதாக முன்நகர்ந்து கொண்டிருக்கின்றன. (மேலே சொன்ன மார்ச்சு 22, திசம்பர் 22 என்பவை இந்தக் காலத்தில் நிகழ்பவை; ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னால், அல்லது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், அவை இதே நாட்களில் நிகழ்ந்தவை அல்ல.) இந்த ஒக்கநாட்களின் இயக்கத்தை முற்செலவம் (precession; precede = முன்செல்லு) என்று வானியலில் கூறுவார்கள்.

இந்தக் காலத்தில் பசந்த ஒக்கநாள் என்பது மீன (pisces) ஓரையில் ஏற்படுகிறது (=விழுகிறது). கூடிய விரைவில், இன்னும் ஐந்தாண்டுகளில் கி.பி. 2012 - ல் அது அஃகர (aquarius) ஓரையின் தொடக்கத்தில் வந்து விழும். அப்படி விழும் போது, புதிய உகத்திற்கு நாம் போகிறோம் (உகம் = ஒன்று சேரும் காலம்; உகம்>யுகம்>yuga என்ற வடமொழியில் வந்து சேரும்.) என்று வரலாற்றாசிரியர்கள் சொல்லுகிறார்கள். அதே போல, வரலாற்றின் முன்காலத்திற்கு முற்செலவத்தின் துணை கொண்டு போனால், ஒரு காலத்தில் ஏப்ரல் 14 -ல் மேழ ஒரையின் தொடக்கத்தில் (மேஷ ராசி) இந்த ஒக்க நாள் விழுந்திருக்கும். அதாவது ஒரு காலத்தில் மேழத்தில் விழுந்த பசந்த ஒக்க நாள் இன்று 24 நாட்கள் முன்னேயே மீனத்தில் மார்ச்சு 22-ல் நிகழ்கிறது. இது போல முற்செலவத்தின் நகர்ச்சியால், கூதிர் ஒக்கநாள், பனி முடங்கல், வேனில் முடங்கல் ஆகிய மற்றவையும் 24 நாட்கள் முன்தள்ளிப் போகின்றன. அதாவது அக்டோபர் 15ல் விழ வேண்டிய கூதிர் ஒக்கநாள் செப்டம்பர் 23-லேயே நடக்கிறது. சனவரி 14ல் நடக்க வேண்டிய பனிமுடங்கல் திசம்பர் 22 -இலும், சூலை 14ல் நடக்க வேண்டிய வேனில் முடங்கல் சூன் 22 -இலும் நடக்கின்றன.

இந்த முற்செலவம் என்ற இயக்கம் மாந்த வாழ்க்கையில் ஒரு நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வரலாற்றில் பருவங்களைக் குறிக்கும் எந்தக் குறிப்பையும், முற்செலவம் கொண்டு உரசிப் பார்த்துப் புரிந்து கொள்ளவேண்டும். மொத்தமாய் ஒரு முழு முற்செலவம் முடிய கிட்டத்தட்ட 25783 ஆண்டுகள் ஏற்படுகின்றன (அளவு கோல்கள் நுணுக நுணுக, இந்த இயக்கத்தின் நடப்புக் காலமும் துல்லியப் பட்டு வருகிறது). 25783 ஆண்டுகள் என்று எடுத்துக் கொண்டால், ஒரு ஓரையில் (உகத்தில்) 25783/12 = 2148.58 ஆண்டுகள் என்ற ஒரு பருவ காலம் அமையும். இந்தப் பருவகாலத்தை உகம் (=யுகம்) என்று சொல்லுகிறார்கள். உகம் உகமாய் மாந்த வாழ்க்கை மாறுகிறது என்பது இப்படித் தான். இப்பொழுது மீன உகத்தில் இருக்கும் நாம் அடுத்து ஐந்தே ஆண்டுகளில் அஃகரை உகத்திற்குள் நுழையப் போகிறோம்;

இந்திய வானியலில் முற்செலவம் என்ற அயனத்தையும், வலயம், தன்னுருட்டு ஆகியவற்றையும் சேர்த்து இயக்கங்களைக் கணக்கிடும் முறைக்கு உடன் அயன முறை (உடன் = சக என்று வடமொழியில் அமையும்; சக அயன முறை = sayana method) என்று பெயர். மேலையர் பெரும்பாலும் இந்த முறையில் தான் கணிக்கிறார்கள். மாறாக, முற்செலவம் என்ற அயனத்தைக் கழித்து மற்றவற்றைப் பார்ப்பது நில்லயன முறை (nirayana method) எனப்படும். இந்திய வானியலில் முற்செலவத் திருத்தம் (precession correction) கொண்ட நில்லயன முறை என்பது விதப்பாகப் பின்பற்றப்படுகிறது. நில்லயன முறையின் படி, தை மாதத்தில் இருந்து ஆனி மாதம் வரை இருக்கும் சூரியத் தோற்ற நகர்ச்சியை வட செலவு (=உத்தர அயனம்) என்றும், ஆடி மாதத்தில் இருந்து மார்கழி மாதம் வரை இருக்கும் சூரியத் தோற்ற நகர்ச்சியை தென் செலவு (=தக்கண அயனம்) என்றும் சொல்லுவார்கள். தென்செலவை முடித்துக் கொண்டு, வடசெலவை நில்லயன முறையின் படி சூரியன் தொடங்குவது தை முதல் நாளில் தான். அதே பொழுது உடன் அயன முறையின் படி, இந்த வடசெலவு தொடங்குவது இந்தக் காலத்தில் திசம்பர் 22 ஆகும். இங்கே கூறும் கால வேறுபாடு முற்செலவத்தால் ஏற்படுவது. இன்னொரு விதமாய்ப் பார்த்தால், சனவரி 14/15ல் நடக்க வேண்டிய பனி முடங்கல், ஒரு நாள் முன் போய் சனவரி 13/14ல் நடக்க, 25783/365.25636556 = 70.587672, ஆண்டுகள் ஆக வேண்டும். இந்த அளவை வைத்துக் கொண்டு, வெறும் முழு நாட்களாய்ப் பார்க்காமல், இன்னும் நுணுக்கமாய் நாட்கள், மணி, நுணுத்தம் என்று கணக்குப் போட்டால், இன்று திசம்பர் 22ல் நடக்கும் பனி முடங்கல், 1722 ஆண்டுகளுக்கு முன்னால் சனவரி 14-லேயே நடந்திருக்கும் என்று புலப்படும். அதாவது கி.பி.285-க்கு அண்மையில் பனிமுடங்கல் என்பது, பொங்கல் நாளில் நடந்திருக்கும். அந்தப் பொழுதில், நில்லயன முறையும், உடன் அயன முறையும் ஒரே கணக்கைக் காட்டும். இன்னொரு வகையிற் சொன்னால், இந்திய அரசின் அதிகாரக் கணக்கின் படி, முற்செலவத்தின் நடப்புச் சுற்று தொடங்காதிருந்த ஆண்டு கி.பி. 285 ஆகும். இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் முற்செலவச் சுற்று தொடங்கிய நாளும் இந்திய வானியலின் படி கி.பி.285 க்கு அண்மையில் தான்.

இந்திய வானியலில் முற்செலவத்தின் நடப்புச் சுற்று தொடங்காதிருந்த நிலையை நினைவு படுத்தி, பசந்த ஒக்க நாளும் மேழ விழுவும் ஒன்று சேர்ந்திருந்தன என்று சொல்லுவார்கள். (ஒருக்களித்த விசும்பு வட்டத்தில் மேழ ஓரை தொடங்கும் நாளை மேழ விழு என்றும், துலை ஓரை தொடங்கும் நாளைத் துலை விழு என்றும் சொல்லுவார்கள். மலையாளத்தில் மேழ விழுவை மேஷ விஷு என்றும், துலை விழுவைத் துலாம் விஷு என்றும் சொல்லுவார்கள்.)

பொங்கல் நாள் என்பது ஒரு காலத்தில் (அதாவது கி.பி.285ல்) பனிமுடங்கலைச் சுட்டிக் காட்டிய பண்டிகை என்பது இதுவரை சொன்ன விளக்கத்தால் புலப்படும். பனிமுடங்கலைக் கொண்டாடுவதன் மூலம், "அந்த நாளுக்கு அப்புறம் இரவு குறைந்து பகல் நீளும், இனிமேல் மகிழ்ச்சி பொங்கும், பனி குறையும், சூரியன் நெடு நேரம் பகலில் இருப்பான், இனிமேலும் வீட்டிற்குள் அடங்கியிருக்க வேண்டாம்" என்று உணர்த்துகிறோம். தெற்கு நோக்கிப் போய்க் கொண்டிருந்த கதிரவன் இனித் திரும்பி வந்து வடக்கு நோக்கி வரத் தொடங்குவதற்காக, அவனுக்கும் இறைவனுக்கும் நன்றி சொல்லும் ஒரு விழா தான் இந்தப் பொங்கல் விழா.

அந்த அடிப்படையைப் பார்க்கும் போது, பொங்கல் விழா என்பது சங்கம் மருவிய காலத்தில் தான் முதலில் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று ஊகிக்கிறோம். இதற்கு ஏற்றாற் போல சங்க இலக்கியத்தில் (கி.பி.285க்கு முந்திய இலக்கியத்தில்) எங்கணுமே பனிமுடங்கலை ஒட்டி எழுந்த பொங்கல் விழா பற்றிய குறிப்பு பதிவு செய்யப் படவே இல்லை. அப்படியானால் பொங்கல் விழாவைத் தமிழர் அதற்கு முன் என்ன சொல்லிக் கொண்டாடினர் என்ற கேள்வி எழுகிறது.

அந்தக் கேள்விக்கான விடை, விழாவைக் கொண்டாடும் முறையில் இருக்கிறது. பொங்கலின் போது சிவன், விண்ணவன் என்று எந்தச் சமயத்தின் தொன்மக் கதைகளும் ஊடே கலந்து சொல்லப் படுவதில்லை. பொங்கலுக்கான படையல் என்பதும் வெட்ட வெளியில் சூரியனுக்குக் கீழே அளிக்கப் படுகிறது. அறுவடை முடிந்து பெற்ற புத்தரிசி, கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, நம்முடைய கொடிவழிக் காய்கறிகள் (குறிப்பாக அவரை, புடலை, கத்திரி, வாழை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு போன்றவையே அன்று வைக்கப்படும். மேலையர் காய்கறிகளை இந்தப் படையலோடு வைப்பதைத் தவிர்ப்பார்கள்), வெல்லம் ஆகியவற்றோடு தான் படையல் இடப்படுகிறது. விழாவிற்கு முன்னால், வீட்டைத் தூய்மை செய்து, முடிந்தால் வெள்ளையடித்து, கோலமிட்டுச் செய்யும் ஒவ்வொரு வேலையிலும் கூடச் சமயஞ் சேராத ஈடுபாடே இருக்கும். விழாவின் போது செய்யும் "பொங்கலோ, பொங்கல்" என்ற கூப்பாடு கூட நல்லது நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பையே குறிக்கிறது.

இத்தகைய குறிப்புக்கள் அத்தனையும், இந்த விழாவை தமிழர் என்னும் இனக்குழு (tribe) தொடர்பான விழா என்று தெளிவாக உணர்த்துகின்றன. இந்த விழாவின் நடைமுறையைப் பார்த்தால், மெய்யியற் சமயங்கள் (religions emphasizing philosophy) தமிழகத்தில் நிலைகொள்ளுவதற்கு முன்னாலிருந்தே, இனக்குழு வழிபாடுகள் நிலவிய போதே, இந்த விழாக் கொண்டாடுவது தொடங்கியிருக்க முடியும், ஆனால் வேறு எதையோ அது குறித்திருக்க வேண்டும் என்று புரிந்து கொள்ளுகிறோம். அந்த வேறு எது என்பது அடுத்த கேள்வி. [இன்றைக்கும் கூட இனக்குழு வழிபாடுகள் எல்லாமே, குறிப்பாக அய்யனார் கோயில்கள், அம்மன் கோயில்கள், கருப்பண சாமி கோயில்கள் ஆகியவற்றில் நடக்கும் - tribal worships - எல்லாம் பொங்கலிட்டுப் படையல் இடுவது (இது பெரும்பாலும் கறியாகவும், ஓரோவழி மரக்கறியாகவும் இருக்கும்), மாவிளக்கு வைப்பது என இயற்கையளவிலேயே இருப்பதை ஓர்ந்து பார்த்தால் நான் சொல்லுவது புரியும்.]

[இந்த இடத்தில் கொஞ்சம் இடைவிலகல். பொதுவாக, மெய்யியற் சமயங்கள் நம்மூரில் களப்பிரர் ஆட்சிக்கு அப்புறமே நிலைத்தன. அதுவரை நம்மூரில் விரவியவை இனக்குழுச் சமயங்களும் (tribal religions), வடபுலத்தில் இருந்து வந்த செயினம், புத்தம் (இவற்றோடு இங்கே பெரிதும் பங்களிக்கப் பட்ட ஆசீவகம்), வேதநெறி ஆகியவையுமே. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த மாணிக்கவாசகரின் திருவாசகத்திற்கும் (மாணிக்க வாசகரின் காலம் பற்றிப் பலர் வேறுபடக் கூடும். என்னுடைய இன்றையப் புரிதல் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு தான்), ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த திருமந்திரத்திற்கும் முன்னால் சமய வரைபாட்டைச் சொல்லும் நூல்கள் தமிழில் ஏற்படாததே மெய்யியற் சமயங்கள் தமிழர் வரலாற்றில் பின்னால் ஓங்கியவையே என்பதை உணர்த்தும். அதே பொழுது சிவன் கோயில், விண்ணவன் கோயில் போன்றவை சங்க காலத்திலும் இருந்திருக்க முடியும். ஆனால் அவை ஏதோ ஒரு மெய்யியலைச் (சித்தாந்தத்தைச்) சுட்டிக் காட்டின என்று சொல்லமுடியாது. (என்னுடைய புரிதலின் படி மாணிக்க வாசகரே தமிழில் எழுந்த முதல் சிவநெறி மெய்யியல்காரர்.)

கோயிலைக் குறிக்கும் சொற்கள், குறிப்பாக ஆலயம் என்ற சொல் ஆல மரத்து வெளி என்ற பொருளையும், அம்பலம் என்ற சொல் திறந்த வெளி என்பதையும், கோட்டம் என்ற சொல் கூடுகின்ற இடம் என்ற பொருளையுமே காட்டுகின்றன. எல்லோரும் பெரிதாக இன்று பயன்படுத்தும் கோயில் என்ற சொல் கூட "இறைவன் வீடு" என்று இன்றைக்கு வலிந்து கூறப்படும் பொருளைக் காட்டிலும், கோவுகிற இல் = கோவில் என்று பொருள் கொள்ளுவது சிறப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது. கோத்தல்/கோவுதல் என்ற வினைச்சொல்லிற்கு ஒன்றுசேர்த்தல் என்றே பொருள் அமைகிறது. ஊரில் உள்ளவர் ஒன்று கூடும் இடம் கோவில் என்ற பொருள் இந்த வினைச்சொல்லின் அடிப்படையில் இயல்பாக வருகிறது. ஆக ஆலயம், அம்பலம், கோட்டம், கோவில் என்ற இந்தச் சொற்கள் எல்லாமே இனக்குழுப் பொருள்களையே தருகின்றன.

அந்த வகையில் சங்க இலக்கியங்கள் காட்டும் இறை வழிபாடுகள் எல்லாம் வெறுமே இனக்குழு வழிபாடுகளாகவே இருக்கின்றன. அவற்றில் மீநிலைச் சமயப்பொருள்கள் பொதுவாக அமைவதில்லை. [பெரும் ஆதன் (=பரமாத்மா), உயிர் ஆதன்(=ஜீவாத்மா), பதி - பசு - பாசம் போன்று விளக்கம் சொல்லும் மெய்யியல்கள் எழுவதற்கு முன்னமே இருந்த பொருளை நான் இங்கு சுட்டிக் காட்டுகின்றேன்.] தமிழகத்துள் சங்க காலத்திற்குச் சற்று முன்னால் நுழைந்த வடபுலத்து வேத நெறியும் கூட முதலில், வேத நெறியின் வழி வேள்வி நடத்துவது, வேண்டுதல், அவி சொரிதல் என இனக்குழு வழிபாட்டையே காட்டுகிறது. இந்த வேத நெறி தமிழ்நாட்டில் ஏற்படுத்திய தாக்கம் பற்றிப் பலவிதமான தவறான புரிதல்கள் தமிழ் இணையத்தில் உலவுகின்றன. அதைப் பற்றி இந்தக் கட்டுரையில் நான் பேச முற்படவில்லை. வேறு ஒரு பொழுது பார்க்கலாம். இந்த இனக்குழு வழிபாட்டைக் கேள்வி கேட்டு வாதப் படுத்துவதின் மூலம், உலகாய்தம், செயினம், புத்தம், ஆசீவகம் போன்றவை கலகச் சமயங்களாய் (polemic religions) நம்மூரில் எழுந்தன. அவற்றிற்கு விடை சொல்லும் முகத்தால், எதிர்வினையாக, வடநாட்டில் உபநிடதங்களும், தமிழகத்தில் மாணிக்க வாசகராலும், திருமூலராலும், திருவாசகமும், திருமந்திரமும் எழுந்தன. திருவாசகத்திற்கு முந்திய மெய்யியற் செய்திகளை நான் தமிழில் கண்டதில்லை.]

சரி, கி.பி.285-க்கு முன்னால், இந்த விழா எதுவாக இருந்திருக்கும் என்பதை இனிப் பார்ப்போம்.

கி.பி.285 கால அளவில் தான், நம்மூரில் ஆண்டு ஒன்றை நான்கு பருவங்களாய்ப் பிரிக்கும் பழக்கம் பெரிதும் புழக்கத்திற்கு வந்தது. சங்க இலக்கியம் முழுதிலும் இந்த நான்கு பருவக் காலம் குறிப்பிடாதது வியப்பாக இருக்கிறது. மாறாகப், பின்பனி தொடங்கி, இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி ஈறாக ஆறு பெரும்பொழுதுகள் ( = இருதுப் பருவங்கள்) குறிப்பிடப்படுகின்றன.

இப்படிப் பின்பனியில் ஆண்டைத் தொடங்குவதற்கு சங்க இலக்கியத்திலும்,வடமொழி சாற்றங்களிலும் சான்றுகள் இருக்கின்றன. தொல்காப்பிய வழக்கத்தின் படி காரில் இருந்து ஆண்டு தொடங்கியதும் புலப்படுகிறது. இளவேனிலில் தொடங்கியது சங்க காலம் முடியும் போதே ஏற்பட்டிருக்க வேண்டும். (சிலம்பில் இந்திரவிழா இளவேனிலில் தொடங்குகிறது.)

சூரிய ஆண்டுத் தொடக்கம் (tropical year beginning) என்பது பனிமுடங்கல், வேனில் முடங்கல், இரு ஒக்க நாட்கள் என்ற நான்கு நாட்களில் தான் தொடங்க முடியும். அவற்றில் ஒக்க நாட்கள் என்பவை வானியல் அறிவு கூடிய காலத்தில் கணக்கிட்டுப் பார்த்தே அறிய முடியும். ஆனால் முடங்கல் நாட்களோ வெறும் குச்சியின் நிழலை வைத்தே அறிந்து விட முடியும். இனக் குழுக்களாய் வாழ்ந்த காலத்தில் கூட நேரம் என்பது நிழலை வைத்தே கண்டறியப் பட்டது. இந்திய வானியலில் சாய் என்ற சொல் (இது வடமொழியில் jya என்று ஒலிபெயர்ப்பாகும்; வடமொழியில் இந்த ஒலிபெயர்ப்புச் சொல்லுக்குப் பெண்ணின் மார்பு வளைவு என்ற பொருள் இருந்ததைக் கண்டு, அரபு வழி கிரேக்கம் போன போது, sine என்ற சொல்லெடுக்கும். தமிழனின் சாய் எப்படியோ திரிந்து இன்று sine ஆகி நிற்கிறது.) கூட நிழலின் வழி வானியல் படித்த வரலாற்றை நமக்கு உணர்த்தும்.

பின்பனியில் ஆண்டைத் தொடங்குவது என்பது வட செலவில் இருந்து தொடங்குவதற்கு இணையானது. தைமுதல் நாள் பொங்கல் விழாவைக் குறிப்பதற்கு முன்னால் ஆண்டுத் தொடக்கத்தைக் குறித்தது. ஏதோ ஒரு காரணத்தால், நாள்காட்டுகளில் இருந்து இந்திய வானியலில் ஓரைகளுக்கு நகர்ந்த காலம் கி.பி.285. அதே காலத்தில் தான் இப்போதைய முற்செலவச் சுற்றும் தொடங்கியிருக்கிறது. ஆறு பருவங்களுக்கு மாறாய் நான்கு பருவங்களைப் பேசும் பழக்கமும் தோன்றியிருக்கிறது. களப்பிரர் ஆட்சி தமிழகத்தில் நிலைத்ததும் இதே காலமே. இன்னும் இது பற்றி ஆய்வு செய்யப்பட வேண்டிய செய்திகள் பலவும் இருக்கின்றன.

பெரும்பொழுதுகளுக்கு மாதங்கள் குறிப்பிடும் போது இந்தக் காலத்தில் (மாசி,பங்குனி), (சித்திரை, வைகாசி), (ஆனி, ஆடி), (ஆவணி, புரட்டாசி), (ஐப்பசி, கார்த்திகை), (மார்கழி, தை) என்று ஆறு இருமாதங்களைக் குறிப்பிடுவார்கள். இத்தகைய இன்றையப் புரிதலை மீண்டும் முற்செலவம் கொண்டு உரசிப் பார்த்தால், ஒவ்வொரு இருதுவையும் 24 நாட்களுக்கும் மேல் முன்தள்ளிப் பார்க்க வேண்டும். அப்படித் தள்ளும் போது, பின்பனி என்பது சங்க காலத்தில் (தை, மாசி) என்ற மாதங்களையும், இளவேனில் என்பது (பங்குனி, சித்திரை) மாதங்களையும், முதுவேனில் என்பது (வைகாசி, ஆனி) மாதங்களையும், கார் என்பது (ஆடி, ஆவணி) மாதங்களையும், கூதிர் என்பது (புரட்டாசி, ஐப்பசி)மாதங்களையும், முன்பனி என்பது (கார்த்திகை, மார்கழி) மாதங்களையும் குறித்திருக்க வேண்டும். அப்படியானால், ஆண்டுத் தொடக்கம் என்பது தை முதல் நாளே என்பது புரியும்.

பிறகு எப்படி ஆண்டு/ஆட்டை என்ற சொல் எழுந்தது? மேழ ஓரை என்பது ஆடு என்ற உருவைக் குறிக்கும் ஓரையே. ஆட்டின் வழி ஏற்பட்ட சொற்கள் ஆண்டு, ஆட்டை என்பவை. ஆடு தலையாக எண்ணப் பட்டது நெடுநல் வாடையில், 

திண்ணிலை மருப்பின் ஆடுதலை யாக
விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலல் மண்டிலத்து
முரண்மிகு சிறப்பிற் செல்வனோடு நிலைஇய
உரோகிணி நினைவனள் நோக்கி -----

என்று குறிப்பிடப்படுகிறது. உறுதியாக நெடுநல் வாடை என்பது கி.பி.285க்கு முன்னர் எழுந்த பாட்டே ஆகும்.

அப்படியானால், இரண்டு விதமான ஆண்டுத் தொடக்கங்கள் (ஒன்று தையில் தொடங்குவது, இன்னொன்று சித்திரையில் தொடங்குவது) இந்த நாவலந்தீவில் இருந்திருக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாய், தைத்திங்கள் என்பது ஆண்டுத் தொடக்கம் என்ற குறிப்பு ஒழிந்து, அதே பொழுது, பழைய நினைவுகளைக் குறிக்கும் முகத்தான் சூரியப் படையலோடு அது அமைந்து போனது; அதே காலத்தில், கொஞ்சம் கொஞ்சமாய் சித்திரைத் தொடக்கமே ஆண்டுத் தொடக்கம் ஆயிற்று போலும்.

சூரியன் மேழத்தில் நுழைவதே இன்றையத் தமிழர் புரிதலில் ஆண்டுப் பிறப்பு. அதே போல சூரிய மானத்தின் படி, சூரியன் ஓர் ஓரையில் இருந்து இன்னோர் ஓரைக்குப் போவதே மாதப் பிறப்பாகும். சூரிய மானப் பெயர்களான, மேழம் (=மேயம்>மேஷம்), விடை (ரிஷபம்), ஆடவை (மிதுனம்), கடகம், மடங்கல் (=சிகையம்>சிம்ஹம்), கன்னி, துலை(=துலாம்), நளி (விருச்சிகம்), சிலை (தனுசு), சுறவம் (மகரம்), கும்பம், மீனம் என்ற பெயர்களையே மலையாளத்தார் போலத் தமிழரும் புழங்கினால் நன்றாக இருக்கும். [இப்பொழுது சூரியச் சந்திரமானப் பெயர்களான சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகியவற்றையே பயன்படுத்துகிறோம். பழைய கல்வெட்டுக்களில் ஞாயிற்று மாதங்களும் (காட்டாக மகர ஞாயிறு), திங்கள் மாதங்களும் (தைத் திங்கள்) பதிவாக்கப் பட்டிருக்கின்றன.]

இன்றோ, மேலையரின் தாக்கத்தால் மீண்டும் பனிமுடங்கலுக்கு இணையான சனவரி 1 தொடக்கத்தை ஆண்டுத் தொடக்கமாய்க் கொள்ளும் போக்கு அதிகரித்திருக்கிறது. மாதங்களைக் கூட சூரிய மாதங்களையோ, சூரியச் சந்திர மாதங்களையோ சொல்லாமல் மேலையர் மாதங்களை வைத்தே சொல்லும் பழக்கமும் கூடி வருகிறது. ஒரு 20, 30 ஆண்டுகளுக்கு முன்னால் கூட மார்கழி மாதத்து இசைவிழா என்று தான் சொல்லக் கேட்டிருக்கிறோம்; இன்றைக்கு "டிசம்பர் சீஸன்" என்றால் தான் பலருக்கும் விளங்குகிறது. காலத்தின் கோலம் பாருங்கள்!

கட்டுரையை முடிப்பதற்கு முன்னால் ஒரு வேண்டுகோள்.

பொங்கல் விழாவில் "சூரியன் வடக்கு நோக்கி நகர்வதற்கு நன்றி சொல்லுகிறோம்" - அவ்வளவு தான். அந்த நன்றி, சமயம் சாராத, பொது இறைப் பெயருக்குப் போகிறது. பொங்கலும் படையலும் மெய்யியற் சமயம் சாராதவை. என்னைக் கேட்டால், இந்த விழா எந்தச் சமயத்தவரும் பழகக் கூடிய விழா. [திருவோணம் என்ற விழாவைக் கூட பல சமய நெறியினரும் கேரளத்தில் கொண்டாடுகின்றனர். மாவலி மீண்டும் தங்கள் வீட்டிற்கு வந்து மகிழ்ச்சியைத் தருவான் என்று எண்ணுகிறார்கள். இன்றைக்குத் திருவோணம் தமிழகத்தில் கொண்டாடவில்லை என்றாலும் அது உறுதியாகத் தமிழர் பண்டிகை தான்; மாவலியும், பெருங்கலாதனும்(>பெருகலாதன்>ப்ரகலாதன்; ஆதன் என்பதே அவன் சேர அரசன் என்பதை நமக்கு உணர்த்தும்) நம் தமிழ் அரசர்கள் தான். சங்க இலக்கியத்தில் பல இடங்களில் திருவோணம் நம்மூரில் - குறிப்பாக மதுரையில் - கொண்டாடப் பட்டதற்குச் சான்றுகள் இருக்கின்றன. பழந்தமிழகத்தில் ஒரு பகுதியான கேரளத்தில் மட்டுமே இப்பொழுது திருவோணம் கொண்டாடப் படுகிறது.]

பொங்கலைப் பொதுவாய்த் தமிழர் கொண்டாடுவதற்கு என்ன தயக்கம், இதில் சமயம் எங்கே வந்தது, என்று புரியவில்லை. பொங்கல் கொண்டாடுவதால், சிவனும் மகிழ்வான்; விண்ணவனும் மகிழ்வான்; தேவனும் மகிழ்வான்; அல்லாவும் மகிழ்வார்; இயற்கையும் சிறக்கும். நண்பர்களே! கொஞ்சம் ஓர்ந்து பாருங்கள்.

பொங்கலோ பொங்கல்!

அன்புடன்,
இராம.கி.

Sunday, November 4, 2007

திராவிடர் - ஆரியர் உண்மை - தந்தை பெரியார்

தோழர்களே! நான் இந்த ஊர்களுக்கு பலதடவை வந்திருக்கிறேன். எத்தனையோ தடவை பொதுக் கூட்டங்களிலும் பேசி இருக்கிறேன். பல தடவை இந்த ஊர்த் தெருக்களில் நடந்திருக்கிறேன்.

அந்தக் காலத்திலெல்லாம் இல்லாத மாதிரி இப்பொழுது மாத்திரம் எனக்கு ஏன் இவ்வளவு ஆடம்பரமும் ஆர்ப்பாட்டமும் ஆன வரவேற்பு நடக்கவேண்டும்? நான் உங்களுக்குப் புதியவனா? வெளிநாட்டிலிருந்து விளம்பரப்படுத்திக் கொண்டு வரப்பட்டவனா? அல்ல. உங்களுக்கு இது செய்கிறேன், அது செய்கிறேன்; மழையை வரவழைக்கிறேன்; தரித்திரத்தையும் நோயையும் ஓட்டுகிறேன்; வெள்ளையனை விரட்டுகிறேன்; 8-நாள் 10-நாள்களில் சுயராஜ்யம் கொண்டு வருகிறேன் என்று ஏதாவது உங்களுக்கு ஆசை வார்த்தை கூறி மயக்கினவனா? ஒன்றும் இல்லையே.

சுயராஜ்யம் என்பது அர்த்தமற்ற பேச்சு

உங்களில் பலர் அதிருப்தி அடையும் படியும் அரசியல்,சமுக இயல் ஆகியவைகளில் உங்களுடைய பழக்கவழக்க நம்பிக்கைகளுக்கு மாறாகவும் பேசுகிறேன்; சுயராஜ்யம் என்பது அர்த்தமற்ற பேச்சு
என்கிறேன்; இந்தியா என்பது. கற்பனை என்றும் சொல்லுகிறேன்; காங்கிரஸ் என்பதும், தேசீயம் என்பதும் ஆரியருக்கு அரண் என்றும் சொல்லுகிறேன்; இந்து மதம் என்பதாக ஒரு மதமே இல்லை என்றும், அப்படிச் சொல்லுவது தமிழர்க்கு இழிவு என்றும் கூட சொல்லுகிறேன்; இன்னமும் பல உங்களுக்கு புதிதாயிருக்கும் படியாகவும், காதுக்கு இனிப்பைக் கொடுக்கக்கூடியதாக இல்லாததாகவும் பேசுகின்றேன்.

இப்படியெல்லாம் பேசுகிற ஒருவனை, நான் சொல்லுவதை அப்படியே ஒப்புக்கொள்ள தயங்குகிற நீங்கள் இவ்வளவு ஆடம்பரமுடன், உற்சாகத்துடன் வரவேற்பதை நான் எனக்காக என்று எண்ணமுடியுமா? ஒரு நாளும் அப்படி நான் நினைக்கவில்லை. இந்த ஆடம்பர வரவேற்புகளால் நான் பெருமை அடையவில்லை.

ஆத்திரமடைந்து ஆடும் வெறியாட்டம்.

ஆனால் பின்னை யாருக்கு? எதற்காக? என்பதை நான் சொல்ல வேண்டாமா? அதைச் சொன்னால்தானே என்னை உண்மையை அறிந்தவன் என்று நீங்கள் கருத முடியும். அதென்னவென்றால் பார்ப்பனர்கள் தேசீயத்தின் பேரால், சுயராஜ்யத்தின் பேரால், காங்கிரசின் பேரால் காந்தியைக் காட்டி உங்களிடம் ஓட்டு பெற்று மந்திரிப் பதவி அடைந்த 25 மாதத்தில், அவர்கள் உங்களுக்குச் செய்த கொடுமையையும் அட்டூழியங்களையும் பொறுக்கமாட்டாமல் உங்களுடைய வயிறு எரிந்து நெஞ்சம் குமுறி ரத்தம் கொதித்து... ஆத்திரமடைந்து ஆடும் வெறியாட்டம் என்றே கருதுகிறேன்.

இந்த வெறியாட்டம் என்னை வைத்து நீங்கள் ஆடுவதற்குக் காரணம் நான் அந்தக் காலத்தில் அதாவது நீங்கள் பார்ப்பனப் புரட்டுக்கு மயங்கி மஞ்சள் பெட்டிக்கு ஓட்டு கொடுக்கப் போகும் காலத்தில் அவர்கள் (காங்கிரஸ்காரகள்) உங்கள் ஓட்டுக்களைப் பெற்றால் இப்படியெல்லாம் செய்வார்கள் என்று புட்டுப்புட்டு விளக்கமாக விளக்கிய காலத்தில், நீங்கள் வேசியின் மையலில் மயங்கிய மைனர்களுக்குச் சொல்லும் புத்திமதியை அடையும் கதிபோல் அவற்றை அலட்சியப்படுத்தி விட்டு கண்மூடித்தனமாக நடந்து கொண்டதைத் தவறு என்று என்னிடம் ஒப்புக் கொள்ளும் பாவனையாய் என்னை முன்னிறுத்தி ஆத்திரம் கொண்டாடுகிறீர்கள் என்றுதான் கருதுகிறேன்.

இந்த ஆத்திரக் கொண்டாட்டத்தில் மஞ்சள் பெட்டிக்கு மக்களின் தரம் தெரியாமல் ஓட்டளித்த உங்களில் அனேகரை வெட்கப்படச் செய்திருக்கிறோம் என்பதையும் நான் உணருகிறேன்.

தோழர்களே! உலகத்தில் இவ்வளவு பெரும்பான்மையான மெஜாரிட்டியாரின் ஆதரவுடன் அதிகாரம் பெற்றவர்கள் இவ்வளவு சீக்கிரத்தில் பொதுமக்களின் மனக் கொதிப்புக்கு ஆளாகி பொது ஜன ஆதரவிழந்து வீழ்ச்சியடைந்ததாக சரித்திரத்தில்கூட பார்ப்பது அரிதாகும்.

ஆணவம் எங்கே?

இன்று அவர்களுடைய, காங்கிரஸ்காரர்களுடைய, பார்ப்பனர்களுடைய ஆணவம் எங்கே? அகம்பாவம் எங்கே? சட்டசபைகளில் நம் தலைவர்களை சிறிதுகூட மதிக்காமல் "எங்களைஅனுப்பிய பொது ஜனங்களைப் போய்க் கேளுங்கள்" என்று அவர்கள் கூறிய திமிரான பேச்சு எங்கே? இன்றைய வீழ்ச்சி எங்கே? என்று பாருங்கள்.

என்ன வீழ்ச்சி என்று யாராவது தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறீர்களா? சொல்லுகிறேன் கேளுங்கள்.

தமிழ்நாட்டுத் தலைவரென்றவரும், காங்கிரஸ் முதன் மந்திரியும், காந்தியாரின் அடுத்த பதவியில் இருப்பவருமான தோழர் கனம் ராஜகோபாலாச்சாரியார் செல்லுமிடங்களிலெல்லாம் பல நூற்றுக்கணக்கான கறுப்புக் கொடியும், போலீஸ் உதவியில்லாமல் நடக்க முடியாத நிலையும், காவலோடு காரிலிருந்து இறங்கி காவலோடு காரில் ஏற்றி மூடாக்குப் போட்டு காரை ஓட்ட வேண்டிய
நிர்ப்பந்தமும் ஏற்பட்டு இருப்பதும் - காங்கிரசுக்கு எதிரி, தேசத்துக்கு எதிரி, மனித சமுகத்திற்கு எதிரி, காந்தீயத்துக்கு எதிரி என்று தப்பட்டை மூலம் பறை அறிவிக்கப்பட்ட எனக்கு இப்படி 50ஆயிரம் பேர், லட்சம் பேர் வரை கூடி ஊர்வலம் செய்வதும், வானம். இடிபட வாழ்த்துக் கூறுவதும், நூற்றுக்கணக்கான வரவேற்புப் பத்திரங்கள் வாசித்தளிப்பத்தும், அய்ந்நூற்றுக்கணக்கான மாலைகள் போடுவதும்,ஆயிரக்கணக்கான ரூபாய்கள் கொடுப்பதுமான இந்தக் காரியங்கள் காங்கிரஸ் வீழ்ச்சிக்கும் பார்ப்பனீய வீழ்ச்சிக்கும் அறிகுறியல்லவா என்று கேட்கின்றேன்.

எதைக் குறிக்கிறது?

நீங்கள் வாசித்தளிக்கும் வரவேற்பின் ஒவ்வொரு எழுத்தும், புள்ளியும், கமா குறியும் எதைக் குறிக்கின்றன? "இந்தப் பார்ப்பன ஆதிக்கத்தை, காங்கிரசை, காந்திப் புரட்டை உடையுங்கள்; அழியுங்கள்; அழித்து கொளுத்திப் புதையுங்கள்" என்று கட்டளை இடுகிறது போலல்லவா காணப்படுகின்றன. நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு ரூபாயும் காசும் என்ன கூறுகின்றன? "அய்யனே! இந்தப் பார்ப்பனீயக் கொடுமையிலிருந்தி. எங்களை விடுதலை செய்தி, மனிதத் தன்மையோடு வாழ்வதற்கு வகை செய்யுங்கள்" என்று கெஞ்சி, அபயம். கொள்ளுவது போலல்லவா வந்து குவிகின்றன.

உங்கள் வாழ்த்திப் பேரொலிகள் எதைக் குறிப்பிடுகின்றன?

என்னை வாழ்த்துக் கூறுவதன் மூலமே உங்கள் எதிரிகள் ஒழிந்தேபோய்விட்டதாகக் கருதி. வெற்றி முழக்கம் செய்வது போலவே காணப்படுகின்றன.

இவைகளுக்காக நான் உங்களுக்குச் சொல்லவேண்டிய பதில் என்ன?

தோழர்களே! இந்த 15 வருஷ காலமாக நான் கூறி வந்ததை இப்பொழுதாவம் நீங்கள் மெய் என்றும், சரி என்றும் கருதுவதற்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டதே என்கின்ற மகிழ்ச்சிப் பெருக்கோடு உங்களுடைய ஆசைக்கும் எதிர் நோக்கத்திற்கும் ஒரு உண்மையான - மெய்யான தொண்டனாக இருந்து, நீங்கள் சிறிதும் மனக்குறை அடையாத வண்ணம் என்னாலான தொண்டைச் செய்கிறேன் என்று வாக்களிப்பதுதான் என்று கருதுகிறேன்.

நம்மை மிருகமாக நடத்த காரணம் என்ன?

தோழர்களே! இன்று நாம் அதாவது, இந்நாட்டுப் பழங்குடி மக்களாகிய நாம், இந்நாட்டை ஆண்டுவந்த அரச பின்வழியாகிய நாம், உலகத்தில் எந்த நாட்டினர்க்கும் பின்வாங்காத வீரம், மானம், அறிவு, ஆற்றல், கலை, நாகரீகம் ஆகியவைகளில் சிறந்த மக்களாகிய நாம், இன்று ஒரு சிறு கூட்டத்தாராகிய, அதுவும் இந்நாட்டுக்கு மலைக் காடுகளில் இருந்து கால்நடைகளுடன் பிழைக்கவந்த கூட்டமாகிய, பாடுபடாத வர்க்கத்தாராகிய ஆரியர்களாலும் பிறராலும் ஆயிரக்கணக்கான வருஷங்களாக அடிமைப்படுத்தப்பட்டு, அடக்கி ஒடுக்கி மிருகமாய் நடத்தப்படுகிற காரணம் என்ன என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

வெள்ளையர் நம்மை அரசியலில் ஆளுகிறார் என்றால், அதற்காகவது ஏதோ ஒரு காரணம் இருக்கலாம். அதாவது, இந்தச் சூழ்ச்சியால் நாம் தமிழர்கள் - திராவிடர்கள் பல்வேறு சமயமாகவும், பல்வேறு மேல்-கீழ் ஜாதி வகுப்புகளாகவும், பல்வேறு லட்சியமுடையவர்களாகவும் ஆக்கப்பட்டு, கல்வி இல்லாமல்,தன்முயற்சி இல்லாமல் நசுக்கப்பட்டு விட்டபடியால் கத்தி, துப்பாக்கி உள்ள வருக்கெல்லாம் பயந்து அடிமையாகி, ஆரியரால் நம் நாட்டிற்கு கூட்டி வரப்படுபவருக்கெல்லாம் குடி ஆகி அல்லல்பட்டு வருகிறோம்.

ஆனால், கத்தி இல்லாத, துப்பாக்கி இல்லாத, உடல் வலிகூட இல்லாத இந்த ஆரியர்களுக்கு, அரசியல், சமுக இயல், சமய இயல், பொருளாதார இயல், ஞான இயல் முதலாகியவைகளுக்கெல்லாம் நாம் உரிமை இல்லாமல் அடிமைப்பட்டு உழல்வதற்குக் காரணம் கண்டுபிடிக்க வேண்டாமா என்று உங்களைக் கேட்கிறேன். அல்லது நம் நிலை தமிழ்நாடு தோன்றியது முதல், தமிழர் தோன்றியது முதல் இப்படித்தான் இருந்ததா என்று கேட்கிறேன்.

உண்மையைப் பாருங்கள்

சரித்திரத்தைப் பாருங்கள்; ஆராய்ச்சியாளர் கூறுவதன் உண்மையைப் பாருங்கள் உலகிலேயே முதல் முதல் தோன்றிய நாடு தமிழ்நாடு என்றும், உலகிலேயே மனித வர்க்கம் தோன்றிய இடம் நம் தென்னாடு என்றும் கூறப்படவில்லையா? இந்த மாதிரிப் பூர்வீகப் பெருமைகளால், பழங்கதைகளால் நமக்கு ஆவது ஒன்றும் இல்லை என்றாலும், இப்படிப்பட்ட தமிழர்கள் ஏன் உலகில் இவ்வளவு கீழான நிலையிலும், இழிவான தன்மையிலும் இருக்கவேண்டும் என்று சிந்தித்துப் பார்க்கவேண்டாமா என்பதற்காகவே இவற்றைக் கூறினேன்.

தமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால், தமிழ் நாட்டையும், தமிழர் வீரத்தையும், கலையையும் நாகரீகத்தையும் மறந்தான். தமிழன் தன்னை இந்து என்று கருதியதால், தனது மானத்தையும், ஞானத்தையும், பகுத்தறிவையும் உரிமையையும் இழந்தான்.

இப்போது, தமிழன் தன்னை இந்தியன் என்பதையும் இந்து. என்பதையும் மறப்பதாலேயே அக்கட்டுகளிலிருந்தும் கூட்டுகளிலிருந்தும் விடுபட்டு விலகுவதாலேயே தன்னை ஒரு மனிதன் என்றும், ஞானத்துக்கும், வீரத்துக்கும், பகுத்தறிவுக்கும், மானத்துக்கும் உரிமை உடையவன் என்றும், இவைகளுக்கு ஒரு காலத்தில் உறைவிடமாக இருந்தவன் என்றும் உணருவானாவான்.

இந்த உணர்ச்சி ஆரியர்களுக்கு விரோதமாகக் காணப்படுவதில் ஆச்சரியமில்லை. அவர்களது கூலிகளில் பலர் இவ்வுணர்ச்சிகளைப் பரிகசிப்பவர்கள்போல் நடிப்பதில் அதிசயமில்லை. ஆனாலும் அதைப் பற்றி நாம் கவலைப்படவேண்டியதில்லை. நான் கூறி வந்தவைகளும், இப்போது. கூறுவனவற்றிற்கும் ஆதாரமாகச் சரித்திரமும், அரிய ஆராய்ச்சி ஞானம் பெற்ற சரித்திர ஆசிரியர்களும் கூறி இருப்பதில் சிலவற்றை மாத்திரம் எடுத்துக் காட்டிவிட்டு, இதுபற்றிய என் பேச்சை முடிக்கிறேன். மற்றவர்களைப் பிறிதொரு சமயம் பார்த்துக் கொள்ளுகிறேன்.

ஆராய்ச்சியாளர் அபிப்பிராயம்

"தென்னிந்தியாவில் வசித்துவந்த ஆரியரல்லாதார்களையே குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும், ராமாயணக் கதையில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது."

இது ரோமேஸ் சந்திரடட் C.I.E.C.S எழுதிய "புராதன இந்தியா" என்னும் புத்தகத்தில் 52வது பக்கத்தில் இருக்கிறது.

"திராவிடர்கள் தங்கள் மீது படையெடுத்து வந்த ஆரியர்களோடு கடும்போர் புரியவேண்டி இருந்தது. இந்த விஷயம் ரிக் வேதத்திலிருந்து அநேக சுலோகங்களாக இருக்கின்றன."

இது டாக்டர் ரோமேஷ் சந்திர மஜும்தார், எம்..ஏ., யின் "பூர்வீக இந்திய சரித்திரமும், நாகரீகமும்" என்னும் புத்தகத்தின் 22ஆவது பக்கத்தில் இருக்கிறது.

"ராமாயணக் கதை என்பது ஆரியர்கள் தென் இந்திய தஸ்யூக்கள் அல்லது திராவிடர்கள் மீது படையெடுத்து வெற்றி பெற்றதைச் சித்தரித்துக் காட்டுவதாகும்"

இது பி.சிம்பரம்பிள்ளை எழுதிய "திராவிடரும் ஆரியரும்" என்னும் புத்தகத்தின் 24 வது பக்கத்தில் இருக்கிறது.

"ராமாயணக் கதையானது புரோகித வகுப்பாருக்கும் யுத்த வீரர்களுக்கும் நடந்த போரைக் குறிப்பதாகும். ராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ள குரங்குகள், கரடிகள் என்பவை தென் இந்தியாவில்
உள்ளவர்களை ஆரியரால்லாதவர்களைக் குறிப்பதாகும்"

இது ரோமேஷ் சந்திரடட் எழுதிய "பண்டைய இந்தியாவின் நாகரீகம்" என்ற புத்தகத்தின் 139-141வ. பக்கங்களில் இருக்கிறது.

"தென்னிந்தியாவில் இருந்த மக்களேதான் ராமாயணத்தின் குரங்குகள் என்றும் அரக்கர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்."

இது "சுவாமி விவேகானந்தர் அவர்களது சொற்பொழிவுகளும் கட்டுரைகளும்" என்ற புத்தகத்தில் "ராமாயணம்" என்னும் தலைப்பில் 587-589வது பக்கங்களில் இருக்கின்றது.

"ஆரியன் என்கின்ற பதம் இந்தியாவின் புராதன குடி மக்களிடமிருந்து தங்களைப் பிரித்துக் காட்டுவதற்காக ஆரியர் ஏற்படுத்திக் கொண்ட பதம்"


தஸ்யூக்கள் என்பது இந்திய புராதன குடிமக்களுக்கு அவர்கள் (ஆரியர்கள்) கொடுத்த பெயராகும்.

இது 1922 ஆம் வருஷம் பிரசுரிக்கப்பட்ட கேம்பிரிட்ஜ் "பழைய இந்தியாவின் சரித்திரம்" என்னும் புத்தகத்தில் இருக்கிறது.

பகைமைக்குக் காரணம்.

"ஆரியரல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர் (சூத்திரர்)கள் என்றும் தஸ்யூக்கள் அசுரர்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

ஆரியருக்கும் ஆரியரல்லாதாருக்கும் இருந்து கொண்டிருந்த அடிப்படையான பகைமையைப் பற்றி ரிக் வேதத்தில் பல இடங்களில் காணலாம். இரு வகுப்பாருக்கும் இருந்த கலை வேற்றுமையும் அரசியல் வேற்றுமையுமே இந்தப் பகைமைக்குக் காரணமாகும்."

இது டாக்டர் ராதா குமுத் முகர்ஜீ, எம்.ஏ.,பிஎச்.டி., எழுதிய "இந்து நாகரீகம்" என்னும் புத்தகத்தில் 69வது பக்கத்தில் இருக்கிறது.

"ராமாயணக் கதையின் உட்பொருள் என்னவென்றால் ஆரிய நாகரீகத்திற்கும் ஆரியரல்லாத நாகரீகத்திற்கும் (அவற்றின் தலைவர்களான ராமன் - ராவணன் ஆகியவர்களால் ) நடத்தப்பட்ட
போராகும்."

இது ராதா குமுத் முக்கர்ஜீ எழுதிய "இந்து நாகரீகம்" என்னும் புத்தகத்தில் 141வது பக்கத்தில் இருக்கிறது.

"தமிழர்கள் என்பவர்கள் இந்தியாவின் தென்கிழக்கிலும் இலங்கையின் சில பாகத்திலும் வசிக்கும் ஆரியரல்லாத திராவிட மக்கள் ஆவார்கள். தமிழ் என்பது மேற்படியார்களால் பேசும். பாஷை".

இது சர்.ஜேம்ஸ் மர்ரே எழுதிய புதிய "இங்கிலீஷ் அகராதி"யின் பக்கம் 67 இல் இருக்கிறது.

"ஆரியர்கள் தங்கள் மொழியை ஆரியரல்லாதாருக்குள் புகுத்த முயற்சித்து முடியாமல் போனதால் ஆரியரல்லாதாருடைய பாஷைகளைக் கற்றுக் கொண்டு அவர்களது. நாகரீகத்தையும் பின்பற்ற வேண்டி வந்தன".

இது பண்டர்காரின் கட்டுரைகள், வால்யூம் 3, பக்க. 10இல் இருக்கிறது.

"தமிழர்கள் ஆரியர்களை வடவர், வடநாட்டார் என்று அழைத்தார்கள். ஏனெனில், ஆரியர்கள் வடக்கே இருந்து வந்தவர்களானதால்,"

இத் டாக்டர் கிருஷ்ணசாமி அய்யங்கார், எம்.ஏ.,பி.எச்.டி., அவர்கள் எழுதிய "தென் இந்தியாவும் இந்திய கலையும்" என்ற புத்தகத்தின் 3வது பக்கத்தில் இருக்கிறது.

"ராமாயணத்தில் தென்னிந்தியா (திராவிட தேசம்) தஸ்யூக்கள் என்ற ராட்சதர்களுக்குச் சொந்தமாக இருந்தது. இவர்கள் (தென் இந்தியர்கள்) வட இந்தியாவில் இருந்து வந்த ஆரியர்களைப் போலவே
நாகரீகமடைந்தவர்களாய் இருந்தார்கள்."

இது பி.டி.சீனிவாசய்யங்கார் எழுதிய "இந்திய சரித்திரம்" முதல் பாகம் என்னும் புத்தகத்தில் 10வது பக்கத்தில் இருக்கிறது.

"திராவிடர்களை ஆரியர்கள் வென்றுவிட்ட அகங்காரத்தால் குரங்குகள் என்றும், கரடிகள் என்றும், ராட்சதர்கள் என்றும் எழுதி வைத்தார்கள். ஆனால் இந்தப்படி இழிவுபடுத்தப்பட்ட வகுப்பாரிட மிருந்தே (திராவிடர்களிடமிருந்தே) பல நாகரீகங்களை இந்தப் பிராமணர்கள் கற்றுக் கொண்டார்கள்."

இது ஷோஷி சந்தர்டட் எழுதிய "இந்தியா அன்றும் இன்றும்" என்னும் புத்தகத்தின் 15-வது பக்கத்தில் இருக்கிறது.

அசுரர்கள் யார்?

"ஆரிய கடவுள்களாகிய இந்திரனையும் இதர கடவுள்களையும் பூசித்தவர்களும், அவர்களைப் பின்பற்றியவர்களும் தேவர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள். இந்த ஆரியக் கடவுள்கள் வணக்கத்தை எதிர்த்தவர்களை அசுரர்கள் என்று அழைத்தார்கள். இந்த இரு கூட்டத்தாருக்கும் விடாப் பகை இருந்து கொண்டே வந்தது".

இது ஏ.ஸி.தாஸ், எம்.ஏ.,பி.எல்., எழுதிய "ரிக் வேதகாலத்து இந்தியா" என்னும் புத்தகத்தில் 151-வது பக்கத்தில் இருக்கிறது.

"ஆரியர்கள் தங்களால் தோற்கடிக்கப்பட்ட எதிரிகளாகிய திராவிடர்களைத் தங்களுடைய புத்தகங்களில் திராவிடர்கள் தஸ்யூக்கள் என்றும், தானவர்கள் என்றும், ராட்சதர்கள் என்றும் குறிப்பிட்டிருக் கிறார்கள்".

"ஆரியக் கவிகள் திராவிடர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பை இது காட்டுகிறது. ஏனெனில் ஆரியர்கள் திராவிட நாட்டில் சிறுகச் சிறுக நுழைந்து ஆதிக்கம் பெறுவதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி எழுதினார்கள்".

இது C.S.சீனிவாசாச்சாரி, M.A., & M.S. ராமசாமி அய்யங்கார்,M.A ஆகிய சரித்திரப் போதகர்கள் எழுதிய "இந்திய சரித்திரம் முதல் பாகம்" என்னும் புத்தகத்தில் "இந்து இந்தியா" என்னும் தலைப்பில்
16,17-வது பக்கங்களில் இருக்கிறது.

"ஆரியர்களில் சமஸ்கிருதம் பேசியவர்கள் மட்டும் இந்தியாவின் மேற்குக் கணவாய் வழியாக நுழைந்து வட இந்தியாவை அடைர்தார்கள். அங்கு தங்களைவிட முன்னேற்றமான திராவிடர்களைக் கண்டு அவர்களிடமிருந்து பல நாகரீகங்களைக் கற்றுக் கொண்டார்கள்".

இது ஏ.எ. வெல்ஸ் எழுதிய "உலகத்தின் சிறு சரித்திரம்" என்னும் புத்தகத்தின் 105ஆவது பக்கத்தில் இருக்கிறது.

"ஜாதிப் பிரிவுகள் நான்கில் அதாவது பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்பவர்களில் முதல் மூன்று பிரிவினர்கள் ஆரிய சம்பந்தப்பட்டவர்கள். கடைசி வகுப்பார் (சூத்திரர்கள்) இந்தியாவின் புராதனக் குடிகள்".

இது "New Age Encyclopedia"(நியூ ஏஜ் என்சைக்ளோபீடியா Vol.II (1925) பக்கம். - 273ல் இருக்கிறது.)

இராமாயணம் எதைக் காட்டுகிறது?

"இராமாயணம், தென்னிந்தியாவில் ஆரியர் பரவியதையும் அதைக் கைப்பற்றியதையும் உணர்த்தும் நூல்".

இது முன்பு கல்வி மந்திரியாய் இருந்த கனம் C.J.வர்க்கி, M.A., எழுதிய "இந்திய சரித்திர பாகுபாடு" என்னும் புத்ததகத்தின் 15-வது பக்கத்தில் இருக்கிறது.

சுருங்கக் கூறவேண்டுமானால், பிராமணர்கள் கல்வியைத் தங்களுக்கே சொந்தமாக ஆக்கிக்கொண்டு அந்த நிலைமையைத் துஷ்பிரயோகப்படுத்தித் தங்கள் இஷ்டம் போல் எல்லாம் தங்களுக்கு அனுகூலமான சகல விஷயங்களையும் உட்படுத்திக் கட்டுக்கதைகளை எழுதி வைத்துக் கொண்டார்கள். இந்தக் கற்பனைக் கதைகள் அனைத்தும் வேண்டுமென்றே கெட்ட எண்ணத்திடன் சாமர்த்திய மாகப் பிறரை அழுத்தி அடிமைப்படுத்தி தங்களுடைய நிலையை உயர்த்திக் கொள்வதற்காகவே எழுதப்பட்டவைகளாகும்".

இது "பார்ப்பன துவேஷி" ராமசாமியால் எழுதப்பட்டதல்ல. பிரபல சரித்திர ஆசிரியரான ஹென்றி பெரிட்ஜ் என்பவர் 1865இல் எழுதின புவிரிவான இந்திய சரித்திரம் முதற் பாகம்" என்னும் புத்தகத்தில் 15-வது பக்கத்தில் இருக்கிறது.

"விஷ்ணு என்கின்ற கடவுள் ஆரியக் கூட்டத்தாருக்கு வெற்றி தேடிக் கொடுக்கவும், யோசனை கூறவும் அடிக்கடி அவதாரம் செய்வதாகக் கருதப்பட்டது."

இது கி.பி. 1918இல் ஹாவெல் எழுதிய "இந்தியாவில் ஆரியர் ஆட்சியின் சரித்திரம்" என்னும் புத்தகத்தின் 32-வது பக்கத்தில் இருக்கிறது.

"பாரத ராமாயணங்கள் முதலிய இதிகாசங்களில் காட்டுமிராண்டிகளும், அசுரர்களும், ராட்சதர்களும், தஸ்யூக்களும் வசிக்கும் நெருக்கமான காடுகள் கொண்ட நாடு என்று குறிப்பிடப்பட்டிருப்பதெல்லாம் தென்னிந்தியாவை (திராவிட நாட்டை)ப் பற்றியேயாகும்."

இது ஜி.எச். ராபின்சன், சி.அ..ஈ. யால் எழுதின "இந்தியா" என்னும் புத்தகத்தின் 155வது. பக்கத்தில் இருக்கிறது.

வட இந்திய திராவிட கலை

"வட இந்தியாவில் இருந்த திராவிடக் கலை, நாகரீகம் முதலியவை யாவும் ஆரியர்களால் அழிக்கப்பட்டுவிட்டன. ஆனால் தென்னிந்தியாவில் அவ்விதம் நடக்கவில்லை."

இது தமிழ்ப் பேராசியர் கே.என்.சிவராஜ் பிள்ளை, பி.ஏ., எழுதிய "பண்டைத் தமிழர்களின் வரலாறு" என்னும் புத்தகத்தின் 11 12 4ஆம் பக்கத்தில் இருக்கிறது.

"பாரதத்தில் இடும்பி என்று ஒரு ஆரியரல்லாத பெண் மணியைப் பற்றி எழுதிய பார்ப்பனக் கவி தனக்குள்ள ஜாதித் துவேஷத்தால் ராட்சஸி என்று எழுதி இருக்கிறான். ராட்சதர் என்கிற பயங்கர புரளி வார்த்தை வைதிகப் பார்ப்பனனின் மூளையில் தோன்றிய கற்பனையேயாகும்."

இது நாகேந்திரநாத்கோஷ், பி.ஏ., பி.எல்., எழுதிய "இந்திய ஆரியரின் இலக்கியமும் கலையும்" என்ற புத்தகத்தின் 194ஆவது பக்கத்தில் இருக்கிறது.

"ராமாயணத்தில் குடிகாரர்கள் சுரர்கள் என்றும் குடியை வெறுத்தவர்களை அசுரர்கள் என்றும் பிரித்துக் கூறப்பட்டிருக்கிறது"

இது ஹென்றி ஸ்மித் வில்லியம், எல்.எல்.டி., எழுதிய "சரித்திரக்காரர்களின் உலக சரித்திரம்" வால்யும். 2இல் பக்கம் 521இல் இருக்கிறது.

"இந்தியாவின் தென்பாகத்திலுள்ள நாடுகளைப் போல 'பிராமணர்கள்' வெற்றியோடு வரும்போது ஆந்திரர், சேரர், சோழர்,பாண்டியர் ஆகிய நாடுகள் மிக்க நாகரீகமான நிலையில் இருப்பதைக் கண்டார்கள்."

இது வின்சென்ட் ஏ.ஸ்மித் ஆக்ஸ்போர்ட் எழுதிய "இந்திய சரித்திரம்" 14வது. பக்கத்தில் இருக்கிறது.

"இந்தியாவிலுள்ள ஆரியர்களிடம் மனிதனைக் கொன்று யாகம் செய்யும் வழக்கம் இருந்திருக்கிறதென்று நிச்சயமாகச் சொல்லலாம்."

இது இம்பீரியல் இந்தியன் கெஜட்டியர் 1909ஆம் வருஷத்திய பதிப்பு வால்யூம் 1இல் 405வது பக்கத்தில் இருக்கிறது.

ஆரியரல்லாதார் பட்ட பாடு

"ஆரியரல்லாத இந்நாட்டு பழங்குடி மக்கள் ஆரியர்களால் காட்டுக்கும் துரத்தப்பட்டார்கள். இதுவும் போதாதென்று அவர்களை ராட்சதர்கள், அசுரர்கள் என்றும் ஆரியர்களும் ஆரிய புரோகிதர்களும் நூல் எழுதி வைத்தார்கள். ஆரியரல்லாதார்களுக்கு இவர்கள் ஆதியில் இட்ட தஸ்யூ., ஆரிய எதிரி என்ற பெயர்கள்தான் நாளடைவில் பிசாசு, பூதம், ராட்சதன் பெயர்களாக மாறிவிட்டன".

இது சர்.வில்லியம் வில்சன் ஹண்டர் K.C.S.I.C.I.E., M.A., ஆக்ஸ்ன்,L.L.T., எழுதிய "இந்திய மக்களின் சரித்திரம்" என்னும். நூலின் 41வது பக்கத்தில் இருக்கிறது.

"ராமாயணக் கதையானது ஆரியர்களை மேன்மையாகக் கூறவும் திராவிடர்களை இழிவுபடுத்திக் காட்டவும் எழுதப்பட்ட நூலாகும்"

இது பண்டித. டி.பொன்னம்பலம் பிள்ளையால் எழுதப்பட்ட "மலபார் குவார்ட்டர்லி ரிவ்யூ" என்னும் புத்தகத்தில் இருக்கிறது.

"நம்மைச் சுற்றி நாலு பக்கங்களிலும் தஸ்யூக் கூட்டத்தார் (திராவிடர்கள்) இருக்கிறார்கள். அவர்கள் யாகங்களைச் செய்வதில்லை, ஒன்றையுமே நம்புவதில்லை, அவர்களுடைய பழக்க வழக்கங்களே
வேறாக இருக்கின்றன. ஓ! இந்திரனே அவர்களைக் கொல்லும் தாசர். வம்சத்தை அழித்து விடுவாயாக."

இது "ரிக் வேதம்" அதிகாரம் 10 சுலோகம். 22.......8 இல் இருக்கிறது.

"ஆரியர்களின் ஒழுக்க ஈனமான காரியங்களில் எல்லாம் சிறந்த காரியங்கள் மதுவருந்துவதும். சூதாடுவதுமாகும். ரிக் வேதத்தில் இதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன."

இது ராகோசின் எழுதின "வேதகால இந்தியா" என்னும் புத்தகத்தில் இருக்கிறது.

"இந்திய அய்ரோப்பியர்களால் (அதாவது ஆரியர்களால்) தோற்கடிக்கப்பட்ட கறுப்பு. மனிதர்களை (திராவிடர்களை) தஸ்யூக்கள் என்றும் கொள்ளைக்காரர்கள் என்றும், அடிக்கடி பிசாசுகளாக மாறக் கூடியவர்கள் என்றும், வேத இலக்கியங்களில் கூறப்பட்டிருக்கின்றது".

இது பால்மாசின் அவர்கள் எழுதிய "புராதன இந்தியாவும் இந்தியாவின் நாகரிகமும்" என்ற புத்தகத்தில் 19வது பக்கத்தில் இருக்கிறது.

"மேற்கு திபேத்தையும் ஆப்கானிஸ்தானத்தையும் தாண்டி முதல் முதல் இந்தியாவிற்குள் வந்த ஆரியர்கள் சமஸ்கிருதத்தைப் போன்ற ஒரு பாஷையைப் பேசினார்கள். இந்தியாவிற்குள் ஆதியில்
நுழைந்த இவ்வெள்ளையர்கள் தங்கள் கொள்கைகள், பழக்க வழக்கங்கள், கவிதைகள், மத நம்பிக்கைகள் முதலியவைகளை அப்பாஷையிலேயே எழுதி வைத்துக் கொண்டார்கள்".

இது சர்.ஹென்றி ஜான்ஸ்ட்டன், ஜி.சி.எ..ஜி., கெ.சி.இ., 1913 இல் எழுதிய "இந்தியாவில் அன்னியர்கள்" என்ற புத்தகத்தின் 19வது. பக்கத்தில் இருக்கிறது.

நிச்சயம்

தோழர்களே! இந்த மாதிரியாகவே ஆரியர் வேறு, தமிழர். வேறு என்பதற்கும், இந்தியாவென்பதற்கும் தமிழ் நாட்டிற்கும் சம்பந்தமில்லை என்பதற்கும், ஆரியர். சமயத்திற்கும் மதத்திற்கும் அவர்களது. கடவுள்; வேதம், புராணம், இதிகாசம், ஸ்மிருதி, சாஸ்திரங்களுக்கும் அவர்களது பழக்க வழக்க நாகரீகம் ஆகியவைகளுக்கும் தமிழர்களுடைய சமயம், கலை, பழக்க வழக்க நாகரீகம் முதலியவற்றிற்கும் சம்பந்தமும், ஒற்றுமையும் இல்லை என்பதற்கும் ஆரியர்கள் தமிழ் மக்களாகிய திராவிட மக்களை இழித்து தாழ்த்தி அடக்கி ஆதிக்கம் செய்து வந்தார்கள், வருகிறார்கள் என்பதற்கும், தமிழர் பழக்க வழக்கங்கள் வீரமெல்லாம் ஆரியரால் அழிக்கப்பட்டுவிட்டன என்பதற்கும் இனியும் இவை போன்ற ஆயிரக்கணக்கான ஆதாரங்களையும், ஆராய்ச்சியாளர் கருத்துக்களையும், சரித்திரச் சான்றுகளையும் ஏராளமாக எடுத்துக் காட்டக்கூடும்.

இவைகளை பொய் என்றோ, மாறுபடுத்தியோ, திருத்தியோ கூறப்பட்டவை என்றும் சொல்லுவதற்கோ, மெய்ப்பிப்பதற்கோ நாளதுவரை எந்த ஆராய்ச்சியாளரும் எந்தப் பார்ப்பனரும் முன் வந்தவர்கள் அல்ல என்பதோடு நாம் மேலே எடுத்துக் காட்டிய அனேக விஷயங்களை ஆதரிக்க, மெய்பிக்க இன்றும் ஆரிய பார்ப்பனர்களாலேயே எழுதப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு பாடமாக
வைக்கப்பட்ட சரித்திர புத்தகங்கள் ஏராளமாய் இருக்கின்றனவென்று., அவைகள் இன்றும் முதல் பாரம் முதல் காலேஜ் வகுப்புகள் ஈறாக பாடமாக வைக்கப்பட்டு பிள்ளைகள் படிப்பிக்கப்படுகிறார்கள் என்றும் துணிவோடு கூறுவேன். ஆனால் இவைகளை நான் கூறும்போது மாத்திரம்தான் நம். எதிரிகளுக்கு வகுப்புத் துவேஷமாயும், ஜாதி வேஷமாயும் காணப்படுவதுடன் நம் தமிழர்களுக்குக்கூட ஏதோ வெறும் குற்றம் குறை கூறுபவனாகவும் காணப்படுகிறேன். அவர்கள் நடுநிலைமையில் இருந்து ஆராராய்ந்து. பார்ப்பார்களேயானால் தங்கள் தவறுதல்களை உணர்வார்கள் என்ற நம்பிக்கை நிச்சயம் எனக்கு உண்டு.

நான் ஏன் இவைகளை எடுத்துக் காட்டுகிறேன் என்பதை எனது தமிழ் மக்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.

நான் கூறுவதெல்லாம் இந்தியா, இந்துமதம், இந்தியர்கள் என்பது நம் நாடும், நம் சமயமும்., நம் சமுகமும் அல்ல வென்பதற்கும் ஆரியர் வேறு, தமிழர் வேறு இவ்விருவர்களுடைய நலனும்
லட்சியமும் வேறு வேறு என்பதற்கும் ஆகவே இவற்றை இவ்வளவு வலியுறுத்திக் கூறுகிறேன். இவற்றை இன்று மாத்திரம் நான் கூறவரவில்லை. 1926ஆம் வருஷம் முதல் "குடி அரசில்" வால்யூம்
வால்யூமாக எழுதி வந்திருக்கிறேன். மேடைகளிலும். கூறி வந்திருக்கிறேன்.

இந்த விஷயங்கள் தெளிவுபட்டு ஒரு நிலை ஏற்பட்டாலொழிய தமிழனுக்கு விடுதலை இல்லை, உரிமை இல்லை, மானம் இல்லை என்பதை உண்மையாக உணர்கிறேன். ஆதலாலேயே இவற்றைக் கூர்ந்து. கவனிக்கும்படி உங்களை வேண்டுகிறேன்.

( தமிழ்நாட்டுச் சுற்றுப் பிராயணத்தில் திருச்சி, சேலம். முதலிய பல இடங்களில் பெரியாருக்கு வரவேற்பும், பணமுடிப்பும் அளிக்கப்பட்ட கூட்டங்களில், வரவேற்புகளுக்கும் பண முடிப்பு களுக்கும் தந்தை பெரியார் அளித்த பதில்களின் தொகுப்பு.)

Friday, March 16, 2007

பழக்கவழக்கம் - டாக்டர். திலகம் பழனிச்சாமி, அருள்மிகு பழனியாண்டவர் கலை-பண்பாட்டுக் கல்லூரி, பழநி .

பழக்கம் என்ற சொல் பழகுதல் அல்லது பயிற்சி யாதல் என்ற பொருளில் தமிழில் பண்டு தொட்டுப் பயின்று வந்துள்ளது. பழகு - பழகிய - பழகுதல் பழக்கம் என்ற சொல்லாட்சிகள் இன்றும் உள்ளன. பழகிப் போன செயல், பழக்கம் ஆகின்றது. பழக்கம் தனி மனிதச் செயற்பாடு. இதனைப் பிறரும் பின்பற்ற வாய்ப்புண்டு.
பழக்கம்
பழக்கம், வழக்கம், பழக்க வழக்கம் என்ற சொல்லாட்சிகள் தமிழரிடையே மிகுதியும் காணப் படுகின்றன.
தொல்காப்பியத்தில் பழக்கம் என்ற சொல்லாட்சி இல்லையாயினும், அப்பொருள் தரக்கூடிய பல சொற்கள் காணப் பெறுகின்றன. 'பழகிய' (தொல்.நூ. 682) என்ற சொல்லாட்சி உண்டு.
''பழக்கம் என்பது ஒரு கற்கும் செயலாகும். இது தனி மனிதனிடம் இயல்பாக வந்தமைந்த நடத்தையைக் குறிப்பதாகும். பழக்கம் வளர்ச்சிக்கு இன்றியமையாத கூறாகக் கருதப் படுகிறது." என்று விளக்குகிறார் க.காந்தி.
''நனவுடன் தொடங்கிய செயல் நாளடைவில் நனவன்றியே அதாவது மூளையின் பிரதானப் பகுதிகளின் சம்பந்தமின்றியே நிகழ்வதாக ஆகிவிடுகின்றது.அப்படி நிகழும் செயலே பழக்கம் எனப்படும்" என்று கலைக்களஞ்சியம் கூறும்.
எந்த ஒரு பழக்கமும் முதலில் தனி மனிதனிடம்தான் தோன்றுகிறது. அதுஇயல்பாகவோ, தூண்டுதலி னாலோ நிகழக்கூடும். பழக்கம் என்பது நல்லதாகவும்இருக்கும், தீயதாகவும் இருக்கும். அதனால்தான் நற்பழக்கம், தீப்பழக்கம் என்ற சொல்லாட்சிகள் ஏற்பட்டன. சமுதாயத்தின் உருவாக்கத்தில் இப்பக்கம் தான்அடிப்படையாக அமைகின்றது.ஒத்த பழக்க முடையவர்கள் ஒன்று சேர்ந்து வாழ்தலே சமுதாயத்தின் தோற்றம் ஆகும்.
சமுதாயங்கள் பலவாகப் பெருகியமைக்கு அடிப்படைக் காரணம் பழக்கமே.
இத்தகைய பழக்கங்கள் இளமை முதலே தொடங்கி வருவன. நல்ல பழக்கங்களை இளமையில் குழந்தை களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நோக்கமே பெற்றோர் ஆசிரியரின் கடமை என்று கல்வி ஆராய்ச்சியாளர்களால் வலியுறுத்தப் பெறுகின்றது. மேலும் நல்ல பழக்கங்களை அமைத்துக் கொள்ள குழந்தைப் பருவமே ஏற்றது என்பது உளவியலாரின் கருத்து.
வழக்கம்
பழக்கம் - வழக்கம் என்றாகி இருத்தல் வேண்டும். பழக்கத்தின் தொடர்ந்த நிலையே வழக்கம் ஆகும். 'சமூகத்தில் அதிகமாகப் பின் பற்றப்படும் பழக்கமான நடவடிக்கையே வழக்கம்ஆகும்... வழக்கங்கள் ஒரு குழுவினுடைய விருப்பங்கள், இலட்சியங்கள், வாழ்க்கைக் கண்ணோட்டங்களால் பிரதி பலிப்பதாகவும் அமைகின்றன' என்று குறிப்பிட்டுள்ளார் க. காந்தி.
இதனையடுத்து, ''ஒரு இனக் குழுவிலுள்ள பலருடைய மனவெழுச்சி, உணர்ச்சி,விருப்பு, வெறுப்பு ஆகியவற்றுடன் இணைந்து நிற்பது வழக்கம் என்று கருதப்படுகிறது" என்றும் குறிப்பிடுவார்.
வழக்கம் என்ற சொல்லாட்சி தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ளமை அதன்பழமையைச் சுட்டுவதாகும்.
''தகுதியும் வழக்கும் தழீஇயின ஒழுகும்
பகுதிக் கிளவி வரைநிலை இலவே." -(தொல்.நூ.500)''
முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை" -(தொல்.நூ.980)
''வல்லெழுத்து மிகினும் மான மில்லை
ஒல்வழி யறிதல் வழக்கத் தான" -(தொல்.நூ.246)''
அக்கென் சாரியை பெறுதலும் உரித்தே
தக்கவழி அறிதல் வழக்கத் தான" -(தொல்.நூ.270)
''சொல்வழி அறிதல் வழக்கத்தான்" -(தொல்.நூ.312)
''சேய்மையின் இசைக்கும் வழக்கத்தான" -(தொல்.நூ.637)''
நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்" -(தொல்.நூ.999)
தொல்காப்பியர் வழக்காறு என்ற சொல்லையும் கையாண்டுள்ளார்.
''வழக்காறல்ல செய்யு ளாறே" -(தொல்.நூ.501)
மக்களிடையே தொன்று தொட்டு வழங்கி வருவது வழக்கம் ஆகும்.
வழக்கு என்பது அக்காலத்தில் நன்னெறி என்ற பொருளில் வழங்கியது.
இதனையே வள்ளுவரும்,
''அன்பொ டியைந்தவழக்கென்ப ஆரயிர்க்
கென்போ டியைந்த தொடர்பு"
என்று கூறியுள்ளார்.
''எண்பதத்தா லெய்த லெளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
"பரிமேலழகரும் வழக்கு என்பதை நன்னெறி என்றே கூறியுள்ளார்.
பழக்க வழக்கம்
பழக்க வழக்கம் - இருசொற்கலப்பாகும். பழக்க வழக்கங்களைத் தனி மனிதனும், சமுதாயம் என்ற அமைப்பும் இணைந்து உருவாக்குகின்றன. சமுதாயம் என்ற அமைப்பு. ஒன்றைக் குறிப்பதன்று. ஒத்த கருத்துடைய பழக்கங்களை மேற்கொள்வாரின் கூட்டமைப்பே சமுதாயமாகும். மக்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டே பழக்கம் உருவாகின்றது. சமுதாயத்தில் அவைஏற்றுக்கொள்ளப்படுகின்ற நிலையில் வழக்கங்களாக உருவாகின்றன.
''தனி மனிதனிடம் இயல்பாக வந்தமைந்த நடத்தையைப் பழக்கம் எனவும் இனக்குழுவிலுள்ள பலருடைய மனவெழுச்சி உணர்ச்சி ஆகியவற்றுடன் இயைந்து நிற்பது வழக்கம் எனவும் சமூகவியலார் கூறுவர்". இக்கூற்று ஏற்புடையதாகும்.
'தனி மனிதன் பழகிப் போன முறையில் திரும்பத் திரும்பச் செய்துவரும் ஒரு குறிப்பிட்ட செயலைப் பல மனிதர் ஒன்றாகச் சேர்ந்து செய்கின்ற பொழுது அதுவழக்கம் எனப் போற்றப்படுகின்றது, என்பர் க.த. திருநாவுக்கரசு.
'பழக்கம் என்பது தனிமனிதனைச் சார்ந்த தொடக்கநிலை எனவும் வழக்கம் என்பதுசமுதாயம் சார்ந்த தொடர்நிலை எனவும் கூறலாம்' என்பர் க. காந்தி.
பழக்க வழக்கம் ஒவ்வொரு இனக்குழுவிற்கும் சமுதாயத்திற்கும் தனிப்பட்டமுறையில் அமைவதைக் காண முடிகிறது. ஒரே ஊரில் வாழ்கின்ற வேளாளக் கவுண்டர்களின் பழக்க வழக்கங்களும், அக முடையார் பழக்க வழக்கங்களும் ஒன்றாக அமையாமல் வெவ்வேறாக அமைந்துள்ளன.
பழக்க வழக்கம் என்ற சொல் இன்று சமுதாயச் செயற்பாட்டு நிலைகளை விளக்கவல்லதாகவே பயன்பட்டு வருகின்றது.
மரபு
மரபு என்பது பழக்க வழக்கத்தோடு தொடர்புடையது;
அதனின்றும் உருவானது என்று கூறப் பெறும்.
பழக்க வழக்கங்களைப் பற்றி அறியுங்காலை,
மரபைப் பற்றிய விளக்கத்தை அறிவதும் இன்றியமையாதது ஆகும்.
தொல்காப்பியர்
நூன்மரபு,
தொகை மரபு,
விளிமரபு
என்று சில இயல்களைஅமைத்ததோடன்றி,
மரபியல் என்றே ஓரியல் வகுத்துள்ளார் எனின் மரபின்சிறப்பும் இன்றியமையாமையும் புலனாகும்.
மரபு என்பதற்குத் தெளிவானவிளக்கத்தைத் தொல்காப்பியர் அளிக்கவில்லை.
ஆனால் மரபு என்பதற்குப் பலஇடங்களிலும் விளக்கம் தந்துள்ளார்.
உரையாசிரியர்களும், திறனாய்வாளர்களும்மரபு என்பதற்குப் பல்வேறு விளக்கங்கள் தந்துள்ளனர்.
அரசஞ்சண்முகனார்,''மரபு என்பது தொன்று தொட்டு வந்த வழக்கு" என்பர்.
''மரபு என்பது ஒவ்வொரு பொருளுக்கும் ஆன்றோர் வழங்கிய சொற்களை அவர்கள்வழங்கிய முறைப்படியே கூறுதல் ஆகும்" என்று தொல்காப்பியச் செல்வம் சுட்டும்.
ச. வையாபுரிப்பிள்ளை, ''ஓர் இனத்தார் ஒரு பொருள் பற்றி வழக்கமாய் அனுசரித்து வரும் நியதியே மரபு என்பது ஆகும்" என்பர்.
பழக்கத்தின் காரணமாக வழக்கம் ஏற்பட்டு அதிலிருந்து மரபாக நிலைபெறுகின்றது என்று ச.வே. சுப்பிரமணியம் மொழிவர்.
நன்னூலார்,''எப்பொருள் எச்சொலின் எவ்வாறு உயர்ந்தோர்செப்பினர் அப்படிச் செப்புதல் மரபு"என்று விளக்கம் தந்துள்ளார்.
மரபு மாறக்கூடியதன்று.
தொன்று தொட்டு வழக்கத்தின் காரணமாக வருவது.
''மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும்"என்று கூறுவர் தொல்காப்பியர்.
பழக்க வழக்கங்கள் ஒரு குழுவினரிடையே பலவாறாக அமைதல் போலவே ஒரு குழுவினரிடையே பல்வேறு மரபுகளும் காணப்பெறும்.''பழக்கம், வழக்கம், மரபு என்ற சொற்கள் ஒன்றோடொன்று உறவுடையன. ஒன்றின் வளர்ச்சி நிலையே மற்றொன்றின் தொடர்ச்சியாக அமைகின்றது.
பழக்க, வழக்க,மரபுகள் எளிதில்மாற்ற முடியாதவை. அவை கால, இட, சூழ்நிலை அமைவுகளுக்குத்தக உருப்பெறுவன. அவ்வாறு உருப்பெறும் மரபுகளே சமுதாய நியதிகளாகக் கருதப் படுகின்றன. எனவே, பழக்கம் என்பது தனிமனிதனைச் சார்ந்தது என்றும்,வழக்கம் சமுதாயத்தைச் சார்ந்ததென்றும், மரபு சமுதாயம் விதிக்கும் கட்டுப்பாடு எனவும் கூறலாம்.
மேலும் பழக்கம் என்பது தொடக்க நிலையாகவும், வழக்கம் தொடர் நிலையாகவும், மரபு பண்பாட்டின் முதிர்நிலை எனவும் வகைப் படுத்தலாம். தனிமனிதப் பழக்கங்களே காலப் போக்கில் சமுதாய வழக்கங்களாக உருப்பெற்றுத் தலைமுறை தலைமுறையாக இடையறாது நிலைத்து வாழ்வு பெறும் நிலையில் மரபுகளாக வாழ்வு பெறுகின்றன" என்று க.காந்தி அளித்துள்ள விளக்கம் சிறப்பாகவும் ஏற்புடையதாகவும் அமைகின்றது.
தொல்காப்பியர், தலைவன் பொருள் தேடக் கடல் கடந்து செல்லுங்கால் தலைவியைஉடன் அழைத்துச் செல்லும் வழக்கம் இல்லை என்று கூறியுள்ளார்.
''முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை." (தொல்.நூ.980)
தொல்காப்பியர் - வழக்கம் என்றே சுட்டுகின்றார்.
பின்னாளில் அதுவே சமுதாயநியதியாக, மரபாக மாறிவிட்டது.
வழக்கம் மரபாகின்றது என்பதற்கு இஃது ஒருசிறந்த எடுத்துக்காட்டாகும்.
பழக்க வழக்கங்களும் சடங்குகளும் பழக்க வழக்கங்கள் போலவே சடங்குகளும் சமுதாயத்தோடு தொடர்புடையன. சடங்கு என்ற சொல்லாட்சி, தொல்காப்பியத்திலோ, சங்க இலக்கியங்களிலோ இடம் பெறவில்லை.
தொல்காப்பியர், 'கரணம்' என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்தியுள்ளார். சடங்கின் முன்னோடிச் சொல்லே கரணம் என்பது.
தொல்காப்பியர்,
''பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப"
''கற்பெனப் படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே"
என்று சுட்டியுள்ளார்.
இந்நூற்பாக்கள் கற்பியலில் வருவதால் திருமணச் சடங்குகள் சுட்டப்பெற்றனஎனக்கொள்வர்.
முதல் நூற்பாவினைப் பொதுவாகக் கொள்வதில் தவறில்லை. நாட்டில்பொய்யும் வழுவும் தோன்றியதால், சமுதாய வாழ்வு சீர்குலையக் கண்ட சான்றோர்கள் நேர்மையுவு கட்டுப்பாடும் கொண்ட சமுதாயத்தை உருவாக்க வேண்டி சடங்குகளைத் தோற்றுவித்தனர் எனக் கொள்வதே பொருந்தும்.
திருமணத்தில் சடங்குகள் முறைப்படி, கிழவன் கிழத்தியைத் திருமணம் செய்து கொண்டது அடுத்த நூற்பாவால் புலனாகின்றது. திருமணத்தில் கிழத்தியை அவர்தம் பெற்றோர் கொடுப்பது மரபு. இதனைக் கொடைக்குரி மரபினோர் என்ற சொல்லாட்சி உணர்த்தும்.
''பழக்கம் என்பது பயிற்சியின் முதிர்ச்சி... உயர்ந்தோர் பழக்கங்கள் காலப்போக்கில் வழக்கங்கள் என்று பெயர் பெறுகின்றன."
''ஒரு செயல் நன்மை விளைவிக்கின்றது என்று மக்கள் உணரும் நிலையில் அதுபழக்கமாக மாறுகிறது. காலப் போக்கில் வழக்கங்கள் என்று பெயர் பெறுகின்றன.''
''ஒரு செயல் நன்மை விளைவிக்கின்றது என்று மக்கள் உணரும் நிலையில் அதுபழக்கமாக மாறுகிறது. காலப்போக்கில் அறிவியல், கல்வி ஆகியவை காரணமாகச் சமுதாயத்தில் முன்னேற்றம் ஏற்படும் போது அது சடங்காக மட்டும் நிற்கிறது."
''செயல், பழக்கம், சடங்கு மூன்றும் வெவ்வேறு வளர்ச்சிப் படியிலுள்ள ஒரே செய்தியாகும்"
என்று வி.சரசுவதி அவர்கள் கூறும் கருத்து முற்றிலும் பொருத்தமானதே ஆகும்.
பழக்க வழக்கங்கள் தொடக்கத்தில் வரன் முறையின்றி அமைய வாய்ப்புண்டு.பின்னர் தேவை ஏற்படும் பொழுது சட்டதிட்டத்துடன் வரன் முறைப்படுத்துங்கால் அவை சடங்காக மாறுகின்றன.
திருமணத்தில் பெண் பார்த்தல் என்பது ஒரு மரபு.
பெண் பார்க்கச் செல்லும்போது இத்தனை பேர் செல்ல வேண்டும், இன்ன இன்ன பொருட்களை எடுத்துச்செல்ல வேண்டும் என்று நெறிப்படுத்தும் போது அதுவே சடங்காக ஆகின்றது. இதைப்போன்றே ஒவ்வொரு நிகழ்விலும் தொடர்புடைய சடங்குகள் தோற்றம் பெற்றன.
''இயற்கையின் சீற்றங்களிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள நினைத்த அவன்(மனிதன்) இப்படிச் செய்தால் இவ்வாறு நடக்கும் என்று எண்ணிக் கற்பித்துக் கொண்ட செயல்முறைகள் சடங்குகளாகத் தோற்றம் கொண்டன" என்று சடங்குகளின் தோற்றத்திற்குக் கூறும் காரணம் பொருந்துவதாக இல்லை.
ஏனெனில்இன்று இயற்கையின் சீற்றம் இன்றியே இயல்பான வாழ்க்கையிலேயே சடங்குகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
''மனித இனத்தை ஒன்றுபடுத்தி மகிழ்ச்சியில் திளைக்க வைப்பதே விழாக்களின் செயற்பாடாகும். அவை சடங்குகளின் அடிப்படையில் தோன்றி சமுதாய நம்பிக்கையின் காரணமாகச் செல்வாக்குப் பெற்று வளர்ந்தும் வாழ்ந்தும் மறுமலர்ச்சியடைந்தும் மக்களினங்களிடையே தொன்று தொட்டு நிலவி வருகின்றன.விழாக்கள் எனபன மக்கள் ஒன்று சேர்ந்து நடத்தும் கூட்டுச் சடங்குகளிலிருந்து தோன்றியனவாகவே காட்சி தருகின்றன. சடங்குகளே விழாக்களுக்கு அடிப்படை. சடங்குகளின் ஒன்றிணைக்கப் பட்டகூட்டுத் தொகுதியினை விழா எனக் கூறலாம்" என்று கருத்து கூறுகிறார் க.காந்தி.
இவரின் கூற்று முற்றிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதன்று. இறைவன் தொடர்பான விழாக்கள் மாதந்தோறும், ஆண்டு தோறும் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு விழாவிற்கும் வரை யறுக்கப்பட்ட விதிமுறைகள் பின்பற்றப் படுகின்றன. இவற்றை வழிபாட்டு முறைகள் என்று கூறுவார்களே தவிர, சடங்குகள் என்று கூற மாட்டார்கள்.
இல்லங்களில் நடைபெறும் விழாக்களில்பின்பற்றப்படும் நடைமுறைக்குச் சடங்கு என்று பெயர். ''சடங்குகள் என்பதற்கு நற்செயல்கள் என்று பொருள் சொல்லலாம். இச்சடங்குமுறையானது, சங்க காலத்திலேயே இருந்தது. அந்தக் காலத்தில் இச்சடங்குகளைக்கருத்துணர்வோடு, பொருட்செறிவோடு நற்பயன் கருதித்தான் அமைத்தனர். நம்முன்னோர்கள் அறிவுப்பூர்வமாகத்தான் எதையும் மேற்கொண்டு இருந்தனர். இதன்உண்மை நிலையை அறியாமல் தான் நம்மில் சிலர் மூடப்பழக்கம் எனக் கைவிட்டனர்"என்று கருத்துரைப்பர் தே.ப.சின்னச்சாமி.
சடங்குகள் சமுதாயத்திற்குச் சமுதாயம் வேறுபட்டுக் காணப்பெறும். சடங்குஒன்றாக இருக்கலாம். செய்யும் முறை வேறாக இருத்தல் கூடும். பழக்கவழக்கங்களைப் போலவே சடங்குகளும் பலவகை யானவை; இனத்திற்கு இனம் மாறுபட்டு இருப்பவையும்கூட. நம்பிக்கைகள்ஒரு சமுதாயத்தில் மக்களிடையே காணப்பெறும் நம்பிக்கைகள் கருதத்தக்கன. சமூகத்தின் பண்பாட்டு மரபினை அறிவிக்க வல்லன. அச்சமுதாயத்தின் நம்பிக்கைகள் தோற்றம் பெற்றன.
திருமணம் பேசச் செல்லும் முன்னர், கோவிலில் பூப்போட்டுப் பார்த்தல் இன்றும் மக்களிடையே ஒரு வழக்கமாக இருந்து வருகின்றது. இன்ன பூ விழுந்தால் காரியம் கைகூடும்; இன்ன பூ விழுந்தால் காரியம் கைகூடாது என்று மக்கள் நம்புகின்றனர். நிமித்தம் பார்த்தலும் நம்பிக்கைகள் தோன்றுவதற்குக் காரணமாகின்றன. பூப்போட்டுப் பார்த்தல் என்பது நாமாகவே கோவிலுக்குச் சென்று இறைவனிடம் வேண்டிக் கேட்பதாகும். மற்றும் பல்லிகள், பறவைகள், விலங்குகள் இவற்றின் ஒலிகளும் நிமித்தங்களாகக் கருதப்படுகின்றன.
''கள்ளி முள்ளரைப் பொருந்திச் செல்லுநர்க்கு உறுவது கூறுஞ் சிறுசெந் நாவின்மணியோர்த் தன்ன தெண்குரற்கணிவாய்ப் பல்லிய காடிறந் தோரே"
பல்லியின் ஒலிப்பு இங்கு நன்னிமித்தமாகக் கருதப்பெற்றது.
நல்லது நிகழும்என்ற நம்பிக்கை கொண்டிருந்தனர்.
பழக்க வழக்கங்கள், மரபுகள், சடங்குகள், நிமித்தங்கள், நம்பிக்கைகள்முதலியன சமுதாயத்தின் பண்பாட்டை வெளிப்படுத்தும் வாயில்களாக அமைந்தன. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் இவை தனித்தன்மை உடையனவாக விளங்குகின்றன.

Monday, March 5, 2007

தமிழிலேயே சாப்பிடலாம்! - கரு.திருவரசு.

சாப்பாடு எனும் சொல் புதிராக இருக்கிறது.
`````````````````````````````````````````
இது தமிழ்ச் சொல்லா? பழந்தமிழ் இலக்கியத்தில் இச்சொல் இருக்கிறதா? எனப் பல கேள்விகளை ஒரே நேரத்தில் கேட்டார் ஒரு நண்பர்.
`
சாப்பாட்டுக்குத் தமிழில் உணவு, உண்டி, அடிசில் எனப் பல சொற்கள் இருக்கின்றன.
`
சாப்பாடு எனும் சொல்லுக்கு வேர்ச்சொல் விளக்கம், மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் "முதல் தாய்மொழி" எனும் நூலில் ஒப்பொலிப்படலம் எனும் பகுதியில் பின் வருமாறு விளக்குகிறார்.
`
"இருதிணைப் பொருள்களும் இயற்கையாகவும் செயற்கையாகவும் பிறப்பிக்கும் ஒலிகளைப் போன்ற ஒலிக் குறிப்புகளும் அவற்றை அடிப்படையாகக் கொண்ட சொற்களும் ஒப்பொலிச் சொற்களாம். உயர்திணையொலிகள்.
`
எடுத்துக்காட்டு:
`
ஒலிக் குறிப்பு, சப்(பு). சொல் சப்பு - சப்பிடு - சாப்பிடு - (சாப்பீடு) சாப்பாடு."அவர் கூற்றை உறுதிப் படுத்துமாப் போல உண்ணல் ஐந்து வகை எனச் சொல்லும் சூடாமணி நிகண்டு,
`
"பல்லினால் கடித்தல் நக்கல் பருகல் விழுங்கல் மற்றும் மெல்லவே சுவைத்தலாகும் வினவில்ஐந் துணவு தாமே" எனும் செய்யுள் வழி உண்ணல் வகையில் கடித்துண்பது, நக்கியுண்பது, பருகியுண்பது, விழுங்கியுண்பது, சப்பியுண்பது என விளக்குகிறது.
`
சப்பிடு - சாப்பிடு - சாப்பாடு. மேற்காணும் விளக்கங்களைப் பின்வரும் அகரமுதலிகள் தரும் சொல் பொருள்களும் பிற செய்திகளும் பெரிதும் உறுதிப் படுத்துகின்றன.
`
அகரமுதலிப் பொருள்:
`
சப்புதல் - மெல்லுதல், குதப்புதல், உறிஞ்சிக் குடித்தல்.
`
சப்பிக் கொடுத்தல் - வாயிலிட்டுப் பதப்படுத்திக் குழந்தைக்குக் கொடுத்தல்.
`
சப்பெனல் - சாரமின்மைக் குறிப்பு, உப்பில்லாப் பண்டம் சப்பென்றிருக்கும்.
`
சப்புக் கொட்டுதல் - சாப்பிட்டபின் சுவையை நினைத்து நாக்கை மேல் அண்ணத்தோடு ஒட்டி ஒலி எழுப்புதல்.
`
உணவு உட்கொள்ளும் வகைகள் என்று இருபத்தைந்துக்கு மேற்பட்ட சொற்கள் தமிழில் உள்ளன எனக் குறிப்பிடும் திரு.இரா.வேங்கடகிருட்டிணன் (நூல்: தமிழே முதன்மொழி) தரும் குறிப்பில் "சப்புதல்" எனும் சொல்லையும் தருகிறார்.
`
மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் தம் "சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்" எனும் நூலில் உணவுண்ணுதற்கான 29 வகைச் சொற்களைத் தந்து பொருள் விளக்கமும் தருகின்றார்.
`
1. அசைத்தல் - விலங்குபோல் அசையிட்டடுத் தின்னுதல்
2. அதுக்குதல் - சூடான உணவை வாயின் இருபுறத்திலும் மாறிமாறி ஒதுக்குதல்
3. அரித்தல் - பூச்சி புழுப்போலச் சிறிது சிறிதாய்க் கடித்தல்
4. அருந்துதல் - சிறிது சிறிதாய்த் தின்னுதல் அல்லது குடித்தல்
5. ஆர்தல் - வயிறு நிரம்ப உண்ணுதல்
6. உண்ணுதல் - எதையும் உட்கொள்ளுதல்
7. உதப்புதல் (குதப்புதல்) - வாயினின்று வெளிவரும்படி மிகுதியாய்ச் சுவைத்தல்
8. உறிஞ்சுதல் - ஒன்றிலுள்ள நீரை வாயால் உள்ளிழுத்தல்
9. ஒதுக்குதல் - ஒரு கன்னத்தில் அடக்குதல்
10 கடித்தல் - கடினமானதைப் பல்லால் உடைத்தல்
11 கரும்புதல் - ஒரு பொருளின் ஓரத்தில் சிறிது சிறிதாய்க் கடித்தல்
12 கறித்தல் - மெல்லக் கடித்தல்
13 குடித்தல் - கலத்திலுள்ள நீரைப் பொதுவகையில் வாயிலிட்டு உட்கொள்ளுதல்
14 குதட்டுதல் - கால்நடைபோல் அசையிட்டு வாய்க்கு வெளியே தள்ளுதல்
15 கொறித்தல் - ஒவ்வொரு கூலமணியாய்ப் பல்லிடை வைத்து உமியைப் போக்குதல்
16 சப்புதல் - சவைத்து ஒன்றன் சாற்றை உட்கொள்ளுதல்
17 சவைத்தல் - வெற்றிலை புகையிலை முதலியவற்றை மெல்லுதல்
18 சாப்பிடுதல் - சோறுண்ணுதல்
19 சுவைத்தல் - ஒன்றன் சுவையை நுகர்தல்
20 சூப்புதல் - கடினமானதைச் சப்புதல்
21 தின்னுதல் - மென்று உட்கொள்ளுதல்
22 நக்குதல் - நாவினால் தொடுதல்
23 பருகுதல் - கையினால் ஆவலோடு அள்ளிக் குடித்தல்
24 மாந்துதல் - ஒரே விடுக்கில் அல்லது பெருமடக்காய்க் குடித்தல்
25 முக்குதல் அல்லது மொக்குதல் - வாய் நிறைய ஒன்றையிட்டுத் தின்னுதல்
26 மெல்லுதல் - பல்லால் அரைத்தல்
27 மேய்தல் - மேலாகப் புல்லைத் தின்னுதல்
28 விழுங்குதல் - மெல்லாமலும் பல்லிற் படாமலும் விரைந்து உட்கொள்ளுதல்
29 மிசைதல் - மிச்சில் உண்ணுதல்
`
நாம் பெருந் தீனிக்காரனைச் சாப்பாட்டு ராமன் என்று சொல்கிறோம்.
தெலுங்கு மொழியிலும் இது சாப்பாட்டு ராமுடு என வழங்குகிறதாம்.
`
தமிழில் நிலைமொழிக்கு முன்னால் ஒரு பிறமொழிச் சொல்லை வருமொழியாகக் கொண்டு புணரியல் விதிப்படி இணைக்கலாமா, முடியுமா? என்பதற்குக் காட்டுகள் தந்து விளக்கம் தரும் மூதறிஞர் வ.சுப.மாணிக்கம் சாப்பாடு என்பதைத் தமிழ்ச் சொல்லாகவே காட்டுகிறார்.
`
அவர் தந்த காட்டுகள்:
`
அவர் + ரவை வாங்கினார். சாப்பாடு + ரெடி.
`
புலவர் இரா.இளங்குமரன் தொகுத்த வழக்குச்சொல் அகராதியில் "சாப்பாடு போடல்" என்பதைப் பின்வருமாறு விளக்குகிறார்.
`
"நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் திருமண அகவை உடையவர்களெனின், என்ன, எப்பொழுது சாப்பாடு போட எண்ணம், போகிற போக்கைப் பார்த்தால் சாப்பாடு போடும் எண்ணமே இல்லையா? என வினவும் சாப்பாடு திருமணப் பொருட்டதாம்.
`
திருமணம் என்றாலே பலவகைக் கறிகள், பாயசம், அப்பளம், வடையுடன் சாப்பாட்டுச் சிறப்பே பெருஞ் சிறப்பாகப் பேசப்படுவதாகலின் சாப்பாடே திருமணப் பொருள் தருவதாயிற்று.
`
தாலிகட்டு முடிந்தால் இலை முன்னர்தான் பலரைப் பார்க்கலாம்.
`
அவ்வளவு பாடு, சாப்பாடு. பழந்தமிழ் இலக்கியத்தில் இந்தச் சொல் இருக்கிறதா?இருப்பதாகத் தெரியவில்லை.
`
என்றாலும் இக்கேள்வி தொடர்பாக இங்கே நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய செய்திகள்.
`
1. நம் இலக்கிய நூல்கள் அனைத்தும் இப்போது நம்மிடம் இல்லை.
`
"மறைந்து போன தமிழ் நூல்கள்" எனத் திரு. மயிலை சீனி வேங்கடசாமி 338 பக்கங்கள் கொண்ட ஓர் ஆய்வு நூலே எழுதியுள்ளார்.

அதில் 314 மறைந்து போன தமிழ் நூல்களின் விவரம் தருகிறார்.

சிதைவுண்ட நூல்களென மேலும் 319 நூல்களைக் குறிப்பிடுகிறார்.
`
2. இருக்கும் எல்லா நூல்களுக்கும் சொல்லடைவு தொகுக்கப்படவில்லை.
`
எனவே, பழந்தமிழ் இலக்கியத்தில் இருந்தால் தான் அது தமிழ்ச் சொல் என ஏற்றுக் கொள்ளலாம் என்பது முறையல்ல.
`
நாராயண பாரதியார் என்பார் எழுதி 1905ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்ட "திருவேங்கட சதகம்" எனும் நூலில், "நல்வண்ண மென்னிலொரு சாப்பாடு" என வரும் பாடலடியில் "சாப்பாடு" கிடைக்கிறது.
`
முக்கனியும் சர்க்கரையும் மொய்ம்மலர் போல் தோசைகளும் தக்க மிளகாய்ப் பொடியும் சட்டினியும் - பக்குவமாய்ச்சாப்பிடுங்கள் சாப்பிடுங்கள் என்று கிருஷ்ணசாமி தந்த காப்பிக்கும் உண்டோ கணக்கு எனத் தனிப்பாடல் திரட்டில் வரும் ஒரு வெண்பாவில் புலவர் வே.முத்துசாமி என்பார் சாப்பிடுங்கள், சாப்பிடுங்கள் என்கிறார்.
`
சாப்பாடு எனும் சொல் வழங்கும் சில பழமொழிகள்:
`
1 அன்று சாப்பிட்ட சாப்பாடு இன்னும் ஆறு மாதத்திற்குத் தாங்கும்.
2 கோட்டுச் சம்பா ஆக்கிவைத்தால் போட்டுச் சாப்பிட வருவார்கள்.
3 சத்திரத்திலே சாப்பாடு சாவடியிலே படுக்கை.
4 சத்திரத்துச் சாப்பாட்டுக்குத் தலத்து ஐயங்கார் அப்பனையோ?
5 சாப்பிடும் கலம் பொன்னானாலும் ஊறுகாய் கேளாமல் கடியுமா?
`
சாப்பாடு எனும் சொல் வழங்கும் முறை, நிலைகளை வைத்துப் பார்த்தால் இது ஒரு பிற்கால வழக்குச் சொல்லாகவும் இருக்கலாம்.
`
எது எப்படியிருந்தாலும் "சாப்பாடு" தமிழ்ச் சொல்லே.

உண்டியை, உணவை, அடிசிலைச் சோற்றை, அன்னத்தைப் பொங்கலைப் புளியோதரையை, இடியாப்பத்தை, இட்டலி தோசையைச் சாப்பாடு எனவும்,
சாப்பிடுங்கள் எனவும் தாராளமாகச் சொல்லலாம்.

Saturday, March 3, 2007

அடக்கம்

‘அடக்கம் அமருள் உய்க்கும்’ என்று, வள்ளுவம் கூறுகிறது. அடக்கம் மனிதனை உயர்த்தும். அடங்காவிட்டால் அடர்ந்த இருள் ஆழ்த்திவிடும். அடங்க அடங்க வாழ்வு உயரும். அடக்கத்தை அடைந்தவர்கள், வானோருடன் ஒப்பிட்டு கூறத்தக்க அளவுக்குப் புகழ் பெற்று உயர்வார்கள்.

ஆமையைப் போல அடக்கம் வேண்டும். ஆமையின் அடக்கத்தினை ஐந்தடக்கம் என்பர். மெய், வாய், கண், காது, மூக்கு ஆகிய புலன்கள் ஐந்தையும் அடக்கி வாழக் கற்றுக் கொண்டால் வாழ்நாள் முழுவதையும் அடக்கமே பாதுகாக்கும். புலன்களின் வழியில் மனம் போனால், புத்தியும் சத்தியும் கெடும். கண் பார்த்ததையும் காது கேட்டதையும் வாய் விரும்பியதையும் மூக்கு நுகர்ந்ததையும் மெய் விரும்பியதையும் அடைய வேண்டுமென்று மனம் அவாவினால், வாழ்க்கையில் துன்பத்தை விட வேறு ஒன்றும் இருக்காது. துன்பத்தைத் தொலைக்க வேண்டுமானால், புலன்களின் அவாவினைக் கட்டுக்குள் கொண்டு வரவே அடக்கம் வேண்டுமென்று கூறப்படுகிறது.

அடக்கத்தைக் கூறும் நூல்களாகிய பகவத் கீதை (2-58), மனு ஸ்மிருதி (பா-105), நாலாயிர திவ்விய பிரபந்தம் (2360) மகாபாரதம் போன்றவை அடக்கத்திற்கு உதாரணமாக ஆமையைக் கூறுகின்றன.

ஆமை, தன் அங்கங்களை ஓட்டுக்குள் இழுத்துக் கோவது போல, அடக்கத்தை மேற்கொள்வோர்கள் தங்கள் புலன்களை அடக்கி உள்ளே இழுத்துக் கொள்கிறார்கள். அதனால், அவர்கள் ஞானநிலை பெற்றதாகிறது என்று, விளக்கங்கள் கூறப்படுகின்றன.

ஆமையைப் போலப் புலன்களை உள்ளே இழுத்துக் கொண்டு அடக்கு! அடங்கு! என்று, திருமந்திரம் கூறவில்லை. அடக்கு என்னும் கருத்தையே திருமந்திரம் ஏற்கவில்லை. புலன்களை அடக்க முடியாது. அடக்குவதால் எந்த பயனையும் அடைய முடியாது. புலன்களோடு கூடியிருந்து அவை பெற்ற பயனை அடையவேண்டும் என்பது, திருமந்திரம் கூறும் தெளிந்த கருத்து.

“அஞ்சும் அடக்குஅடக்கு என்பார் அறிவிலார்
அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கிலை
அஞ்சும் அடங்கில் அசேதனமாம் என்றிட்டு
அஞ்சும் அடக்கா அறிவுஅறிந் தேனே”


என்பதால், உலக இன்பங்களை நெறிப்பட்ட முறையில் நுகர்ந்து கொண்டே பேரின்பம் பெற முடியும்! என்று, திருமந்திரம் கூறும் கருத்து எத்துணைப் பொருத்தமுடையது என்பதை உணரலாம்.

உலகிலேயே அதிக நாள் உயிர்வாழும் விலங்கு ஆமை ஒன்றுதான். ஆமை, அதிக நாள் வாழ்வதற்குக் காரணம் எதுவாக இருக்கும். ஆமை என்ன யோகநெறியா பயின்றிருக்கிறது! காய கல்பம் சாப்பிடுகின்றதா? பின்பு எப்படி அதனால் அதிக நாள் வாழ முடிகிறது? என்னும் ஆராய்ச்சியினால் கிடைத்த முடிபை உரைக்கிறது, திருமந்திரம்.

ஒரு நிமிடத்துக்கு 15 முறை சுவாசித்தால் ஆயுள்
100 ஆண்டாகும்.


ஒரு நிமிடத்துக்கு 18 முறை சுவாசித்தால் ஆயுள்
83⅓ ஆண்டாகும்.


ஒரு நிமிடத்துக்கு 2 முறை சுவாசித்தால் ஆயுள்
750 ஆண்டாகும்.


ஒரு நிமிடத்துக்கு 1 முறை சுவாசித்தால் ஆயுள்
1500 ஆண்டாகும்.


ஒரு நிமிடத்துக்கு 0 முறை சுவாசித்தால் மரணம் என்பதே இல்லை.


இவற்றுக்கும் ஆமைக்கும் என்ன தொடர்பு? என்றால், ஆமை ஒரு நிமிடத்துக்கு மூன்று முறை மட்டுமே சுவாசிக்கிறது.

ஆக, நீண்ட நாள் வாழ வேண்டுமானால், சுவாசத்தைக் கட்டுப் படுத்தும் மூச்சுப் பயிற்சியைச் செய்தோ மானல் நீண்ட நாள் வாழலாம்! என்பது, புலனாகிறது. பெரு மூச்சு விடாதீர்கள். அது ஆயுளைக் குறைக்கும்.